முடங்கிய கிரிக்கெட் போட்டிகள்
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் முடங்கியுள்ளன. கிரிக்கெட் வீரர்களும் தங்களது வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் 117 நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் சர்வதேச போட்டிகள் துவங்கியுள்ளன. இந்தியாவிலும் ஐபிஎல் போட்டிகளை துவங்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ரெய்னா, புஜாரா உள்ளிட்டவர்கள் பயிற்சி
கடந்த மே மாதத்தில் மகாராஷ்டிராவின் போய்சாரில் தன்னுடைய பயிற்சி ஆட்டத்தை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் துவங்கிய நிலையில் அவரை தொடர்ந்து ரிஷப் பந்த், சுரேஷ் ரெய்னா, சத்தீஸ்வர் புஜாரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி மற்றும் இஷாந்த் சர்மா போன்ற வீரர்கள் மைதானத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டனர்.
வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை
இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள வீரர்களுக்கு போட்டிகளில் ஆடுவதற்கு முன்னதாக பயிற்சிகள் அவசியம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சிக்காக பேசிய அவர், மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் துவங்கும்போது வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்தே தான் கவலை கொள்வதாக தெரிவித்துள்ளார்.
4 முதல் 6 வாரங்கள் பயிற்சி அவசியம்
பேட்ஸ்மேன்கள், ஸ்பின்னர்கள் போலல்லாமல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு 4 முதல் 6 வாரங்கள் வரையில் பயிற்சிகள் அவசியம் என்று இர்பான் பதான் கூறியுள்ளார். போட்டிகளின்போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் அவர்கள் பந்துவீசுவது மிகவும் கடினமானது என்றும் காயத்திலிருந்தும் அவர்கள் தங்களை காத்துக் கொள்வது அவசியம் என்றும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இர்பான் பதான் மேலும் கூறினார்.