ஐ.பி.எல்.: கொச்சி அணிக்கு மீண்டும் அனுமதி? உதயமாகிறது அலகாபாத் அணி?
மும்பை: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் கொச்சி அணிக்கு அனுமதி கொடுப்பது குறித்து கிரிக்கெட் வாரியம் பரிசீலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் புதியதாக அகமதாபாத் அணி ஒன்றை உருவாக்கவும் ஆலோசனைகள் நடைபெறுவதாகவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இந்த 2 அணிகளும் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.

நாளை ஆலோசனை
இது தொடர்பாக முடிவு எடுக்க ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு மும்பையில் நாளை கூடுகிறது. இதில் 2 அணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து விவாதிக்கப்படுகிறது.

கொச்சி அணிக்கு அனுமதி?
2011-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற கொச்சி டஸ்சர்ஸ் கேரளா அணிக்கு அனுமதி அளிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

வழக்கை வாபஸ் வாங்க நிபந்தனை..
உரிமையாளர் யார் என்று அறிவிப்பது மற்றும் பணம் செலுத்துவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதால் கொச்சி அணியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்த அந்த அணிக்கு ரூ.550 கோடி நிவாரணத்தை கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்று சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடிவு செய்து இருந்த கிரிக்கெட் வாரியம் தற்போது புதிய யோசனையில் இருக்கிறது.
அதன்படி கொச்சி அணி தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றால் அந்த அணிக்கு மீண்டும் அனுமதி வழங்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அகமதாபாத் அணி
இதேபோல் புதியதாக அகமதாபாத் அணியை உருவாக்கவும் கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறதாம். அனேகமாக அதானி குழுமம் இந்த அகமதாபாத் அணியின் உரிமையாளராக இருக்க வாய்ப்பிருக்கிறது எனவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications