குழப்பம்
இந்திய அணி பந்துவீச்சை பொறுத்தவரை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் அஸ்வின் - ஜடேஜா என 2 ஸ்பின்னர்களை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறது. ஆனால் போட்டி நடைபெறும் சவுத்தாம்டனில் மழைக்கு வாய்ப்புள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால் ஜடேஜாவை வெளியில் உட்காரவைத்துவிட்டு 4வது வேகப்பந்துவீச்சாளராக முகமது சிராஜை களமிறக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் கண்டனம்
இந்நிலையில் இதற்கு அன்ஷுமான் கெயிக்வாட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவர் இந்திய அணியின் முன்னாள் வீரராக மட்டுமல்லாமல் இந்திய அணி பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய தேர்வுக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். ப்ளேயிங் 11 குறித்து பேசிய அவர், எந்தவொரு காரணத்திற்காகவும் ஜடேஜா உட்காரவைக்கப்பட கூடாது. அவர் எதற்காக விலக வேண்டும். 3 வடிவ கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஜடேஜா மிகப்பெரிய சொத்து. 3 வேகப்பந்துவீச்சாளர்களே இங்கிலாந்தில் போதும். 3 வீரர்கள் செய்யாததை 4வது வீரர் செய்துவிடமாட்டார்.
ஜடேஜா ஏன் தேவை?
எத்தனை சர்வதேச அணிகள் ஜடேஜா போன்ற சிறந்த இடதுகை ஸ்பின்னர்களை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் ஜடேஜா ஸ்பின்னராக மட்டுமல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். அதே போல உலகின் தலைசிறந்த ஃபீல்டராகவும் திகழ்கிறார். இதனை விட வேறு என்ன வேண்டும் என அன்ஷுமான் தெரிவித்துள்ளார்.
அசத்தல் ஃபார்மில் ஜடேஜா
இந்திய அணியில் வாய்ப்பின்றி சிரமப்பட்டு வந்த ஜடேஜாவுக்கு கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி கைகொடுத்தது. அதில் முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு பெறாத ஜடேஜா 5வது போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் இந்திய அணி தோற்றாலும், ஜடேஜாவின் ஃபார்ம் வியக்க வைத்தது. அதில் அவர் 7 விக்கெட் எடுத்தது மட்டுமல்லாமல் பேட்டிங்கில் 82 ரன்களை விளாசினார். அன்று முதல் தற்போது வரை ( 3 ஆண்டுகளாக) ஜடேஜாவின் டெஸ்ட் பேட்டிங் சராசரி 55.57 ரன்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.