கடும் விமர்சனம்
பெஸ்ட் பிளேயிங் லெவனை தேர்வு செய்துள்ளோம் என்று கேப்டன் கோலியும், கோச் ரவி சாஸ்திரியும் சொன்னார்கள். இன்ட்ரா-ஸ்குவாட் போட்டிகளில் கூட, 'இந்திய வீரர்கள் அபார ஆட்டம்' , 'அட்டகாசம்' என்ற ரீதியில் முழங்கப்பட, சரி.. எல்லாரும் நல்ல ஃபார்மில் இருக்காங்க போல.. கப் ஜெயிக்குறமோ இல்லையோ.. மேட்சுல அனல் பறக்கும்' என்று ரசிகர்கள் எதிர்பாத்தனர். ஆனால், நியூஸிலாந்திடம் ஏறக்குறைய இந்தியா சரண்டராகிவிட்டது என்றே சொல்லலாம். அவ்வளவு சுமாராக இருந்தது இந்திய வீரர்கள் ஆட்டம். புஜாரா, ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட், ஷுப்மன் கில் என்று அனைவரது ஆட்டமும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
மோசமான பின்னடைவு
இது எல்லாவற்றுக்கும் மேலாக, விராட் கோலி பேட்டிங்கிலும் ஒன்றும் செய்யவில்லை. கேப்டன்சியிலும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதனால், டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் கேள்வி எழுப்பப்டுகிறது. ஏற்கனவே ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளுக்கு என தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்று பரவலாக கோரிக்கை எழுந்து வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வி கோலிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
விஜய் ஷங்கர் எங்கே?
இந்நிலையில், முன்னாள் தேர்வாளர் சரன்தீப் பி.டி.ஐ யிடம் பேசுகையில், "நீங்கள் இனி ஹர்திக்கை மட்டுமே நம்ப முடியாது. அவர் எல்லா வடிவங்களிலும் எப்போது பந்து வீசுவார் என்று உங்களுக்குத் தெரியாது, எனவே ஷர்துல் போன்ற ஒருவர் அல்லது விஜய் ஷங்கர் அல்லது ஷிவம் துபே போன்றோரை இந்திய அணி நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னுரிமை
இதன் மூலம், தமிழக வீரர் விஜய் ஷங்கர் மீதான பார்வை மீண்டும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடவிருக்கும் சூழலில், அதற்குள் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டரை தேர்வு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தில் பிசிசிஐ உள்ளது. அணியில் தற்போது இடம்பெற்றிருக்கும் ஷர்துல் தாகூருக்கு முன்னுரிமை கொடுக்கப்படலாம் என்று கூறினாலும், விஜய் ஷங்கர் மீதான மவுஸ் மீண்டும் அதிகரித்திருப்பதை மறுக்க முடியாது.
அணியில் இருந்து நீக்கம்
2019 உலகக் கோப்பைத் தொடரில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் தேர்வு செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட விஜய் ஷங்கரால், பெரிதாக எந்த இன்னிங்ஸும் விளையாட முடியவில்லை. குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான லீக் போட்டியில், அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும், இம்மியளவு தாக்கத்தை கூட ஏற்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரிலும் அவரால் சரியாக விளையாட முடியவில்லை. இதனால், ஹைதராபாத் அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் அளவுக்கு அவரது நிலைமை மோசமானது.
லண்டன் பயணமா?
இந்த நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யாவின் காயம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் தோல்வி ஆகிய இரு முக்கிய காரணங்களால், மீண்டும் விஜய் ஷங்கர் மீதான மவுஸ் கூடியிருக்கிறது. இங்கிலாந்து தொடருக்கு அவர் உடனடியாக அழைக்கப்படலாம் என்றும் தகவல்கள் கசிகின்றன. இதுகுறித்து விராட் கோலியிடமும் அணி நிர்வாகம் சார்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் இதுகுறித்து வெளியிடப்படவில்லை.