நம்ம புள்ளைங்கோ ஜெயிச்சி கொடுப்பாங்க... நியூசிலாந்து தற்காலிக கேப்டன் டாம் லாதம் உறுதி
Recommended Video
ஹாமில்டன் : இந்தியா -நியூசிலாந்து இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் ஹாமில்டனில் நாளை துவங்கவுள்ள நிலையில், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் உள்ளிட்ட சில வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள டாம் லாதம், அணியில் இடம்பெற்றுள்ள புதுமுக வீரர்கள், அணியின் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் நாளை துவங்கவுள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்து அணியின் தற்காலிக கேப்டன் டாம் லாதம், இந்தியாவுடனான உலக கோப்பை அரையிறுதி போட்டியின் வெற்றியை திரும்பி பார்க்காமல் வலிமையுடன் உள்ள இந்தியாவை எதிர்வரும் ஒருநாள் தொடரில் வெற்றி கொள்வது குறித்து முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஹாமில்டனில் நாளை துவக்கம்
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது தொடரின் முதல் போட்டி ஹாமில்டனில் நாளை துவங்க உள்ளது. இதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் இந்தியாவின் துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா உள்ளிட்ட சிலர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் இரு அணிகளிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக கேப்டன் செய்தியாளர் சந்திப்பு
நியூசிலாந்திற்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் இந்தியா 5க்கு 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில் நாளை முதல் துவங்கவுள்ள சர்வதேச ஒருநாள் தொடரை கைப்பற்ற நியூசிலாந்து தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தொடரின் துவக்கத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த நியூசிலாந்தின் தற்காலிக கேப்டன் டாம் லாதம் அணியின் புதுமுக வீரர்கள் வெற்றியை உறுதி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டாம் லாதம் நம்பிக்கை
கடந்த உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு தற்போதுதான் சர்வதேச ஒருநாள் போட்டிகளை நியூசிலாந்து எதிர்கொள்வதை சுட்டிக்காட்டிய லாதம், உலக கோப்பை அரையிறுதியில் இந்தியாவை வெற்றி கொண்டதை திரும்பிப் பார்க்காமல் தற்போது வலிமையாக உள்ள அந்த அணியை சிறப்பாக எதிர்கொள்வதே முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.

புத்துணர்ச்சி பெற்ற நியூசிலாந்து அணி
கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாதபோதிலும் நியூசிலாந்து அணியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆல் ரவுண்டர் ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோர் அணிக்கு புதிய உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்துள்ளதாக அவர் கூறினார். இதேபோல முதன்முறையாக ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள கீப்பர் டாம் புளுன்டெல், பந்துவீச்சாளர் கைல் ஜாமீசன் ஆகியோரும் நம்பிக்கை அளிப்பதாக கூறினார்.

டாம் லாதம் திட்டவட்டம்
பல்வேறு போட்டிகளில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு விளையாடியுள்ள இந்த புதிய அணியுடன் ஒருநாள் போட்டிகளுக்காக தயாராவது சிறந்த அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்த லாதம், இந்த அணியுடன் வெற்றியை சாத்தியப்படுத்தி விளையாடுவோம் என்றும் குறிப்பிட்டார். வில்லியம்சன் இந்த தொடரில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும், ஆனால் இதன்மூலம் மற்றொரு வீரருக்கு தனது திறனை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தியாவை குறைவாக எடைபோட மாட்டோம்
டி20 தொடரில் அனுபவம் இல்லாத வீரர்களை கொண்டு மோதி 5 போட்டிகளிலும் தோல்வி கண்டது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக குறிப்பிட்ட லாதம், ஆனால் தற்போது வெற்றியை குறிக்கோளாக கொண்டு விளையாடுவோம் என்றும் இந்தியாவை குறைவாக எடைபோட மாட்டோம் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications