மீடூ விவகாரம்.. இந்திய கிரிக்கெட் எங்க போகுதுன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. கங்குலி அதிரடி கடிதம்
Recommended Video

கொல்கத்தா : மீடூ புயல் சமூக வலைதளத்தில் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், அதில் பிசிசிஐ தலைவர் ராகுல் ஜோஹ்ரியும் சிக்கி உள்ளார்.
ராகுல் ஜோஹ்ரி பிசிசிஐ பதவிக்கு வரும் முன் வேறு நிறுவனத்தில் பணியில் இருந்த போது சில பெண்களை சீண்டியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளத்தில் மீடூ என புகார் கூறி இருக்கின்றனர். அவர் மீதான புகார்களை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அமைத்த நிர்வாக ககமிட்டி குழு அமைத்து விசாரித்து வருகிறது.
ஆனால், இந்த விவகாரம் கையாளப்படும் விதம் குறித்த தன் கவலைகளை கங்குலி தெரிவித்துள்ளார். மேலும், கடந்த இரு ஆண்டுகளாக பிசிசிஐ நிர்வாகம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆழமான பயத்தில் எழுதுகிறேன்
கங்குலியின் கடிதத்தில் ராகுல் ஜோஹ்ரி விவகாரம் குறித்து அவர் கூறியுள்ள முக்கியமான விஷயங்கள் இதுதான். "இந்திய கிரிக்கெட் நிர்வாகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற ஆழமான பயத்தில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த விளையாட்டை நீண்ட நாட்கள் ஆடியவன் என்ற முறையிலும், எங்கள் வாழ்வு வெற்றி, தோல்விகளால் முடிவு செய்யப்பட்டது என்ற முறையிலும், இந்திய கிரிக்கெட்டின் முகம் "இமேஜ்" எங்களுக்கு மிக முக்கியம். இப்போது இந்திய கிரிக்கெட் என்ன எப்படி இருக்கிறது என்பதை நாங்கள் காண்கிறோம்."

இந்திய கிரிக்கெட் கீழே செல்கிறது
"நான் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், கடந்த இரு வருடங்களாக விவகாரங்கள் செல்லும் விதம், உலகளவில் இந்திய கிரிக்கெட்டின் அதிகாரம், கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பு மற்றும் நம்பிக்கை எல்லாம் கீழே சென்று கொண்டு இருக்கிறது."

இரண்டு பேருக்குள் பிரிவினை
"சமீபத்தில் வரும் துன்புறுத்தல் புகார்கள் எந்தளவு உண்மை என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதனால் பிசிசிஐ மிக மோசமாக பார்க்கப்படுகிறது. அதிலும், அது கையாளப்படும் விதமும் அப்படி இருக்கிறது. நிர்வாக கமிட்டி முதலில் நான்காக இருந்து பின் இரண்டு பேராக மாறி, இப்போது அந்த இரண்டு பேரும் பிரிந்து இருக்கிறார்கள்"

என்ன தான் நடந்தது?
ராகுல் ஜோஹ்ரி விஷயத்தில் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், மற்றொரு உறுப்பினர் டயானா எடுல்ஜி ராகுலை நீக்க வேண்டும் என கூறி வருகிறார். அதை தான் கங்குலி குறிப்பிட்டுள்ளார். எது எப்படியோ, கங்குலி ஒருவராவது இந்திய கிரிக்கெட் தற்போது இருக்கும் நிலை பற்றி பலரும் பேசத் தயங்கும் நிலையில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications