இராணுவத்தில் தோனி
இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கலோனால் என்ற பதவியில் இருக்கும் தோனி, அடுத்த இரண்டு மாத காலத்திற்கு இராணுவத்தில் இணைந்து பணி புரிவதாக கூறியதோடு, அதை செயல்படுத்தியும் இருக்கிறார். இதற்காக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்தும் விலகினார்.
16 நாட்கள் பணி
வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 15 வரை சுமார் 16 நாட்கள் காஷ்மீரில் 106 பட்டாலியன் எனும் தரைப்படைப் பிரிவுடன் இணைந்து காவல் பணிகளில் ஈடுபட உள்ளார் தோனி. இந்த தகவலை இராணுவ தளபதி உறுதி செய்தார்.
கம்பீர் பாராட்டு
இதைத் தான் பாராட்டி இருக்கிறார் கௌதம் கம்பீர். தோனி இராணுவத்தில் பணிபுரிவது மிகச் சிறந்த முடிவு. தோனி இராணுவ உடையை அணிய விரும்பினால், அவர் இராணுவத்துடன் நேரம் செலவிட வேண்டும் என பல முறை கூறி உள்ளேன்.
ஊக்கம் தரும்
இப்போது உண்மையாகவே இராணுவத்தில் பணிபுரிய முடிவு செய்து தன் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். தோனி இராணுவத்தில் பணிபுரிவது ஆயிரக்கணக்கான இளைஞர்களை இராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் என்றும் பாராட்டினார் கம்பீர்.
ஏழாம் பொருத்தம்
தன்னை அணியில் இருந்து நீக்கியது தோனி தான் என கருதும் கம்பீர் அது குறித்து பல முறை பேசியும் இருக்கிறார். குறிப்பாக 2012ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியா முத்தரப்பு ஒருநாள் தொடரில் தோனி சச்சின், சேவாக் மற்றும் தனக்கும் அணியில் ஒரே நேரத்தில் இடமில்லை என்று கூறியதை வெளியே கூறி தன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
தோனியின் ஓய்வு
சமீபத்தில் தோனியின் ஓய்வு பற்றிய பேச்சுக்கள் கிளம்பிய போது கூட அவர் 2023 உலகக்கோப்பையை மனதில் வைத்து இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும். எங்களுக்கும் அவர் அதே தான் செய்தார் என கூறி இருந்தார்.
கட்சி தொடர்பா?
ஆனால், திடீரென தோனி இராணுவத்தில் சேர்ந்த உடன் அவரை பாராட்டி இருப்பது சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். கம்பீர் மிகவும் நாட்டுப்பற்று மிக்கவராக தன்னை காட்டிக் கொள்பவர் என்பதால், அதே போல தோனியும் இராணுவத்தில் பணிபுரிவதை பாராட்டி இருக்கலாம். அல்லது தோனி பாஜக கட்சியில் சேர உள்ளதாக வரும் தகவல்கள் உண்மையாக இருக்கலாம். பாஜக கட்சியின் எம்பி கௌதம் கம்பீர் அதை பாராட்டி இருக்கலாம். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.