கவாஸ்கர் பேச்சைக் கேட்காத கோலி
இதே ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 1-2 என இழந்தது. அப்போதே கவாஸ்கர் பல தவறுகளை சுட்டிக் காட்டினார். எனினும், கோலி தன் பாணியிலேயே அணியை வழி நடத்தினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அப்போதே கவாஸ்கர் விமர்சனம் செய்தார். அப்போதும் அணியில் எந்த நடவடிக்கையும் இல்லை.
வெற்றி பெற்றதால் மறைந்த விமர்சனம்
தொடர்ந்து இந்தியா இரண்டாம் போட்டியில் இன்னிங்க்ஸ் தோல்வி அடைந்த போது ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்தனர். பின் வீரர்கள் தங்கள் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், விமர்சனத்தில் இருந்து தப்பிக்கவும், நன்றாக விளையாடி மூன்றாம் போட்டியில் வெற்றி பெற்றனர். உடனே, விமர்சனங்கள் மறைந்து வாழ்த்துக்கள் குவிந்தன. அப்போது கவாஸ்கர் பெரிதாக பாராட்டவில்லை. அப்போதும் இந்திய அணி தவறுகள் செய்து இருந்தாலும், எப்படியோ வெற்றி பெற்று விட்டது என்பதால் அமைதியாக இருந்தார்.
கோலியின் தலைமை சரியில்லை
இப்போது நான்காம் போட்டியை இழந்து தொடரையும் இழந்துள்ளது இந்தியா. இப்போது கவாஸ்கர் வெகுண்டு எழுந்துள்ளார். கோலியின் தலைமை தான் சரியில்லை என ஆவேசமாக கூறி இருக்கிறார். கோலி கேப்டன் பதவிக்கு வந்த போது ஒரு குறிக்கோள் கொண்ட, கிரிக்கெட்டை நேசிக்கும் வீரர் ஒருவர் கேப்டனாகி விட்டார் என ஒரு கருத்து இருந்தது. ஆனால், இப்போது என்ன நடக்கிறது? என கேட்கிறார் கவாஸ்கர்.
கோலியே அடிக்க முடியுமா?
இந்தியா டெஸ்ட் போட்டிகளில் ஐந்து பேட்ஸ்மேன்களோடு போகும்போது ஒரு வீரரையே சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. கோலியே அனைத்து போட்டிகளிலும் அடிக்க முடியாது. அவரும் மனிதர் தான். பின்வரிசை வீரர்கள் 60-70 ரன்கள் அடிக்க வேண்டும் என நினைப்பது கொஞ்சம் அதிகம் என தன் கருத்தை கூறி இருக்கிறார்.
ஏழு பேட்ஸ்மேன் வேண்டும்
கவாஸ்கர் முதலில் இருந்தே இந்தியா ஏழு முழுமையான பேட்ஸ்மேன்களோடு களம் இறங்க வேண்டும் என கூறினார். கோலி நான்காம் போட்டி முடிந்த பின் பேசும்போது பின்வரிசை வீரர்கள் இன்னும் கொஞ்சம் நன்றாக ஆடியிருக்கலாம். இங்கிலாந்து பின்வரிசை வீரர்கள் நன்றாக ஆடினார்கள் என கருத்து கூறி இருந்தார். அதை தான் தவறு என கூறி இருக்கிறார் கவாஸ்கர்.
கவாஸ்கர் ஆரம்பித்து வைத்துள்ள இந்த பஞ்சாயத்து பெரிதாகுமா? கோலியின் கேப்டன் பதவி பற்றி வேறு யாரும் இன்னும் பேச ஆரம்பிக்காத நிலையில் கவாஸ்கர் பேசியுள்ளது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பார்க்கலாம்.