"கெய்ல்" புயல் வருது.. பொளந்து கட்டுமா.. பொசுக்குன்னு போய்ருமா?
டெல்லி: இந்தியாவுக்கு எதிரான டுவென்டி 20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்பட்டுள்ளார்.
கெய்லின் சொந்த ஊரான கிங்ஸ்டனில் (ஜமைக்கா) இந்த டுவென்டி 20 போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் (கொல்கத்தாவில் நடந்தது) விளையாடினார்.
அதன் பிறகு அவர் டி20 போட்டிகளில் விளையடாடவில்லை. அதை விட முக்கியமாக அதுதான் அவரது கடைசி சர்வதேச போட்டியாகவும் உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார் கெய்ல். டி20 போட்டிகளில் அதிரடி காட்டும் கெய்ல் 2 சதங்களை அதில் போட்டுள்ளார். இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையே ஒரே ஒரு டுவென்டி 20 போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புயல் வீரர் கெய்ல்
கெய்ல்தான் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிகரமான டுவென்டி 20 வீரர் ஆவார். 35.32 என்ற சராசரியை வைத்துள்ள அவர் 1519 ரன்களைக் குவித்துள்ளார். லென்டில் சிம்மன்ஸுக்குப் பதில் கெய்ல் அணியில் இணைந்துள்ளார்.

சொந்த ஊரில் முதல் முறையாக
சபீனா பார்க் மைதானம்தான் கெய்லின் சொந்த ஊர் மைதானம். இங்கு அவர் இப்போதுதான் முதல் முறையாக சர்வதேச டி20 போட்டியில் ஆடப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோல்டருக்கு ஓய்வு
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஓய்வு தரப்பட்டு, கார்லோஸ் பிராத்வெயிட் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணியில் சுனில் நரீன், கீரன் போலார்ட், மார்லன் சாமுவேல்ஸ், சாமுவேல் பத்ரீ ஆகியோரும் உள்ளனர்.

ஒரு நாள் போட்டித் தொடரில் தடுமாற்றம்
இரு அணிகளுக்கும் இடையே தற்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications