விறுவிறுப்பான போட்டி
ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. முதலில் ஆடிய ஆர்சிபியின் முக்கிய வீரர்கள் யாரும் குறிப்பிடும்படி ஆடவில்லை என்றாலும் அணியின் ஏபி டீ வில்லியர்ஸ், பட்டிதார் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். இவர்களால் அணியின் ஸ்கோர் தாறுமாறாக உயர்ந்தது.
ஏபி டீவில்லியர்ஸ் சிறப்பு
துவக்க வீரர்கள் அவுட் ஆனவுடன், ஆர்சிபி அணியின் ஸ்கோரை டெல்லி கேபிடல்ஸ் சுலபமாக சுருக்கி விடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அடுத்துவந்த ஏபி டீ வில்லியர்ஸ் 42 பந்துகளில் 75 ரன்களை விளாசினார். இதையடுத்து அந்த அணியின் ஸ்கோர் 171ஆக உயர்ந்தது.
டெல்லி அணியின் மோசமான முடிவு
ஏபி டீ வில்லியர்ஸ் நேற்றைய போட்டியில் மிகவும் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக இறுதி ஓவரில் ஸ்டாய்னிஸ் பந்துவீச்சை சிறப்பாக பயன்படுத்தினார். 23 ரன்களை அந்த ஓவரில் ஆர்சிபி வீரர்கள் குவித்தனர். இந்நிலையில் ஸ்டாய்னிசிற்கு இறுதி ஓவரை கொடுத்து டெல்லி அணி மோசமான முடிவை எடுத்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
அதிகரித்த ஸ்கோர்
இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். நேற்றைய போட்டியில் அமித் மிஸ்ரா 3 ஓவர்களை போட்டு 27 ரன்களில் ஒரு விக்கெட்டையும் விழ்த்தியிருந்த நிலையில் அவருக்கு அந்த ஓவரை கொடுத்திருக்க வேண்டும் என்று சோப்ரா கூறியுள்ளார். இதன்மூலம் ஒரே ஓவரில் 23 ரன்கள் அதிகரித்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
இறுதி ஓவர்
அணியின் இஷாந்த் சர்மா, ரபடா மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தங்களது 4 ஓவர்களை பூர்த்தி செய்திருந்த நிலையில் முன்னதாக மிஸ்ராவிற்கு 4வது ஓவரை கொடுத்துவிட்டு இவர்களில் ஒருவரை இறுதி ஓவருக்காக ரிசர்வ் செய்திருக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
தவறிய வெற்றி
மார்கஸ் ஸ்டாய்னிசிற்கு நேற்றைய போட்டியில் ஒரே ஓவர் மட்டுமே, அதுவும் இறுதி ஓவர் கொடுக்கப்பட்டது. அது தேவையில்லாதது என்றும் சோப்ரா தெரிவித்துள்ளார். ஒரே ரன்னில் வெற்றியை டெல்லி கேபிடல்ஸ் தவறவிட்டுள்ள நிலையில், ஸ்டாய்னிஸ் கொடுத்த அந்த 23 ரன்களை தவிர்த்திருந்தால் வெற்றி டெல்லி அணிக்கு வசப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்,