கான்பூர்: குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
10வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது சுவாரசிய கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கான்பூரில் மாலை 4 மணிக்கு தொடங்கிய லீக் போட்டியில், குஜராத் லயன்ஸ் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின.
இதில் 'டாஸ்' வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், முதலில் 'ஃபீல்டிங்' தேர்வு செய்தார். இந்த போட்டியில் வென்றால்தான் பிளேஆப் போகும் வாய்ப்பை உறுதி செய்ய முடியும் என்ற பெரும் கட்டாயத்திற்கு நடுவே போட்டியை எதிர்கொண்டது ஹைதராபாத் அணி.
ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக யுவராஜ் சிங்கிற்கு பதிலாக தீபக் கூடா சேர்க்கப்பட்டார். யுவராஜ்சிங்கிற்கு கை விரலில் லேசான காயம் ஏற்பட்டதால் கடந்த போட்டியின்போது பேட்டிங் செய்ய கஷ்டப்பட்டதை ரசிகர்கள் கவனித்திருப்பார்கள். இதே போல, குஜராத் அணியில், தினேஷ் கார்த்திக், பசில் தாம்பி ஆகியோருக்கு பதிலாக, பிரவீண் குமார், முனாப் படேல் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
குஜராத் அணி 19.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 10.5 ஓவர்களில் 111 ரன்களை குவித்து அசத்திய குஜராத் அப்போதுதான் தனது முதல் விக்கெட்டாக ட்வைன் ஸ்மித்தை 54 ரன்களில் இழந்தது. ஆனால் அதன்பிறகு சிராஜின் அசத்தல் பந்து வீச்சால் மொத்தமாக நிலை குலைந்த குஜராத் வெறும் 154 ரன்களில் சுருண்டது.
ஸ்மித்துடன் ஓப்பனிங்கில் களமிறங்கிய இஷான் கிஷன் 61 ரன்களை குவித்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா 20 ரன்கள் விளாசி நாட்-அவுட்டாக நின்றார். நான்கு பேட்ஸ்மேன்கள் டக்அவுட்டாகினர். எஞ்சியவர்கள் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர். கேப்டன் ரெய்னா 2 ரன்தான் எடுக்க முடிந்தது.
இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங்கை தொடங்கியது. துவக்க வீரர் தவான் (18) அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் (4) விரைந்து வெளியேறியபோதிலும், பின் வந்த விஜய் சங்கர், கேப்டன் வார்னருக்கு தோளோடு தோள் கொடுத்தார்.
இருவரும் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்தனர். இதையடுத்து 18.1 ஓவரில், ஐதராபாத் அணி 2 விக்கெட்டுக்கு 158 ரன்கள் எடுத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. வார்னர் 69 ரன்களுடனும், விஜய் சங்கர் 63 ரன்களுடனும் களத்தில் நின்றனர். இந்த ஐபிஎல் சீசனுடன் வெளியேற உள்ள குஜராத் அணி, அதன் கடைசி போட்டியில் வெற்றி பெற முடியவில்லை. முன்னதாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ரெய்னா வீடியோ வெளியிட்டிருந்தார்.