கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று, 4வது போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு இந்திய கேப்டன் டோணி தெரிவித்தார்.
349 என்ற வெற்றி இலக்கை விரட்டிச் சென்ற இந்திய அணி, விராட் கோஹ்லி மற்றும் ஷிகர்தவான் ஆகியோர் சதத்தோடு நல்ல நிலையில் இருந்தது. ஆனால் தவான் அவுட்டான பிறகு உள்ளே வந்த டோணியோ 3 பந்துகளில் டக்-அவுட் ஆனார். இதன்பிறகு விக்கெட்டுகள் மளமளவென சரிந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு டோணி கூறியது: இந்த போட்டியில் தோற்றதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது விக்கெட் வீழ்ந்த பிறகுதான், பிற விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிந்தன.
போட்டியை நான்தான் முடித்து வைத்திருக்க வேண்டும். இளம் வீரர்கள் அதைச் செய்வது கஷ்டம் என்பதை நானும் உணர்ந்துள்ளேன். இந்த போட்டியின் மூலம், இளம் வீரர்கள் முக்கிய கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தியா வெற்றி பெற சிறப்பான வாய்ப்பு இருந்தும் தோற்றுள்ளோம். பேட்ஸ்மேன்கள் இன்னும் கூடுதலாக ரன் எடுத்திருக்க வேண்டும். நான் கோபப்படவில்லை, ஆனால் ஏமாற்றம் அடைந்துள்ளேன். இவ்வாறு டோணி தெரிவித்தார்.