சச்சின் தானாக ஓய்வு பெறவில்லை.. கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்பியுள்ளனர்..!
பெங்களூரு: ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் தானாக ஓய்வு பெறவில்லை. அவர் ஓய்வு பெறாவிட்டால் நாங்களே நீக்கியிருப்போம். அதை உணர்ந்துதான் அவரே ஓய்வு முடிவை எடுத்தார் என்று கூறியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் தேர்வாளர் குழு தலைவர் சந்தீப் பாட்டீல்.
அவர் கூறுவதைப் பார்த்தால் சச்சின் டெண்டுல்கர் கட்டாயப்படுத்தப்பட்டு ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற பணிக்கப்பட்டாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 2012ம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு குட்பை சொன்னார் சச்சின். அடுத்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓயவு பெற்றார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் படைத்துள்ள சச்சின் டெண்டுல்கர் 24 வருட காலம் கிரிக்கெட் ஆடியவர். ஆனால் அவரது கடைசி வருடங்களில் அவரது ஓய்வு குறித்து மிகப் பெரிய அளவில் விவாதங்கள் எழுந்தன. இந்த நிலையில்தான் அவரது ஓய்வு குறித்து சந்தீப் பாட்டீல் புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

2012 டிசம்பரில் நடந்தது என்ன?
2012ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்தான் தனது ஓய்வு முடிவை அறிவித்தார் டெண்டுல்கர். அப்போது நடந்தது என்ன என்பது குறித்து இப்போது சந்தீப் பாட்டீல் விளக்கியுள்ளார். அந்த சமயத்தில் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியிலிருந்து சச்சினை நீக்கும் முடிவுக்கு தேர்வாளர் குழு ஒருமித்த முடிவை எடுத்திருந்தது. அந்த முடிவோடு சந்தீப் பாட்டீல், சச்சினைப் போய் 12ம் தேதி சந்தித்தார்.

சச்சின் - சந்தீப் பாட்டீல் பேச்சு
சச்சினைச் சந்தித்த சந்தீப் பாட்டீல், அவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டுள்ளார். அதற்கு சச்சின், இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பியுள்ளார் சந்தீப் பாட்டீல். தேர்வுக் குழு எடுத்த ஒருமித்த முடிவையும், சச்சினிடம் தான் பேசியது குறித்தும் கிரிக்கெட் வாரியத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார் பாட்டீல்.

வாரியம் மூலம் சச்சினுக்குப போன அறிவுரை
இந்த நிலையில் வாரியத்திலிருந்து சச்சினிடம் பேசியிரு்பபார்கள் போல. அவர்கள் தேர்வுக் குழுவின் முடிவை சச்சினிடம் தெரிவித்தனர். இதைக் கேட்ட பிறகே சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். வாரியமும் கூட ஓய்வு பெறுங்கள் என்று சச்சினிடம் கூறியிருக்கலாம் என்று தெரிகிறது. இதனால் தான் முதலில் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு சச்சின் வந்துள்ளார்.

நாங்களே நீக்கியிருப்போம்
இதுகுறித்து சச்சின் கூறுகையில், சச்சினுக்கு நடந்தது குறித்துத் தெரிந்திருக்கலாம். எனவே ஓய்வு முடிவை அவர் அறிவித்தார். ஒரு வேளை அவர் முடிவெடுத்திருக்காவிட்டால் நாங்கள் நிச்சயம் அணியிலிருந்து நீக்கியிருப்போம் என்று கூறியுள்ளார் பாட்டீல்.

39 வயதில்
சச்சின் ஒரு நாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 39. அவர் 463 போட்டிகளில் ஆடி 49 சதங்களையும், 96 அரை சதங்களையும் போட்டுள்ளார். மேலும் ஒரு நாள் போட்டிகளில் இவர்தான் அதிக ரன் குவித்த வீரரும் கூட. மொத்தம் 18,426 ரன்களைக் குவித்துள்ளார் சச்சின்.

1989 முதல்
1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி ஒரு நாள் கிரிக்கெட்டில் நுழைந்தவர் சச்சின். அவரது கடைசி ஒரு நாள் போட்டியும் பாகிஸ்தானுக்கு எதிரானதுதான். முதல் போட்டியி்ல ரன் எடுக்காமல் அவுட்டான சச்சின், கடைசி ஒரு நாள் போட்டியில் 52 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications