இந்தியா - வங்கதேசம் தொடர்
இந்தியா - வங்கதேசம் இடையே ஆன டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், கேப்டன் ஷகிப் அல் ஹசன் தலைமையில் சம்பள உயர்வு கோரி ஸ்ட்ரைக் நடந்து முடிந்தது.
தொடரில் ஆடுவாரா?
அதை தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் போர்டு - ஷகிப் அல் ஹசன் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. ஷகிப் கிரிக்கெட் போர்டு ஒப்பந்தத்தை மீறி, விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து இட்டார். அந்த விவகாரத்தால், இந்திய கிரிக்கெட் தொடரில் ஷகிப் பங்கேற்பாரா? என்பதே கேள்விக் குறியாக இருந்தது.
சூதாட்ட சர்ச்சை
இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக, ஐசிசி அமைப்பால் ஷகிப்புக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுவும் ஐபிஎல் சூதாட்ட சர்ச்சை ஒன்றிற்காக என்பது வங்கதேச ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
மூன்று முறை தொடர்பு
2018ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் மற்றும் வங்கதேசம் ஆடிய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச் பிக்ஸிங் செய்ய மூன்று முறை ஷகிப் அல் ஹசனை இந்திய புக்கி ஒருவர் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
முதன் முறை
2018 ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை - வங்கதேசம் - ஜிம்பாப்வே முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும், 2018 ஐபிஎல் தொடரில் முன்கூட்டியே மேட்ச் பிக்சிங் செய்யக் கோரியும் முதன் முறையாக ஷகிப் அல் ஹசனை தொடர்பு கொண்டுள்ளார் ஒரு புக்கி.
மீண்டும் மீண்டும் முயற்சி
ஷகிப் மேட்ச் பிக்ஸிங் செய்ய ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் மீண்டும், மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சிகள் நடந்துள்ளது. அதே முத்தரப்பு தொடரின் ஒரு போட்டிக்கும், 26 ஏப்ரல், 2018 அன்று நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டிக்கும் மேட்ச் பிக்ஸிங் செய்ய ஷகிப்பிடம் பேசி இருக்கிறார் அந்த புக்கி.
சொல்லாதது குற்றம்
இந்த மூன்று மேட்ச் பிக்ஸிங் முயற்சிகளையும் ஷகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் குற்றத் தடுப்பு பிரிவிடம் ஷகிப் கூறி இருக்க வேண்டும். ஆனால், ஒரு முறை கூட அவர் புகார் அளிக்கவில்லை. புக்கி - ஷகிப் அல் ஹசன் இடையே நடந்த உரையாடல் ஐசிசியிடம் உள்ளது, எனவே, கையும் களவுமாக ஆதாரத்துடன் சிக்கிக் கொண்டார் ஷகிப்.
முன்தேதி இட்ட தடை
இதை அடுத்து ஐசிசி விதிப்படி முன் தேதி இட்டு ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டு அக்டோபர் 29, 2020 வரை ஷகிப் அல் ஹசன் எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க முடியாது.
தொடரில் ஆட முடியாது
அடுத்த சில நாட்களில் துவங்க உள்ள இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் பங்கேற்க முடியாது. அவருக்கு பதிலாக மாற்று வீரர்கள் மற்றும் டி20 மற்றும் டெஸ்ட் அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்றுக் கொண்ட ஷகிப்
மேட்ச் பிக்ஸிங் செய்ய தன்னை தொடர்பு கொண்டதை தான் சொல்லவில்லை, அது குற்றம் தான். என ஒப்புக் கொண்டுள்ள ஷகிப், தன் அனுபவத்தை இளம் வீரர்களுக்கு கூறி, இதே தவறை அவர்கள் செய்யாமல் பார்த்துக் கொள்வேன் என கூறி இருக்கிறார்.
ஐபிஎல், உலகக்கோப்பை இழப்பு
ஷகிப் அல் ஹசன் இந்த தடையால் 2020 ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாது. உலகின் முன்னணி ஆல் ரவுண்டராக, சுழற் பந்துவீச்சாளராக வலம் வரும் ஷகிப்பின் இந்த தடையால் வங்கதேசம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.