ஸ்ட்ரைக் அறிவிப்பு
இந்திய தொடருக்கான பயிற்சி தொடங்க இருந்த நிலையில், வங்கதேச வீரர்கள் அதற்கு சில நாட்கள் முன்பு ஸ்ட்ரைக் அறிவித்தனர். சம்பள உயர்வு, உள்ளூர் போட்டிகளில் மாற்றம் என 11 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அந்த போராட்டம் துவக்கப்பட்டது.
சதித்திட்டம் என்ற அதிகாரி
அப்போது அதை எதிர்பாராத வங்கதேச கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் அதை பிளாக்மெயில் என்று கூறினர். எங்களிடம் முதலில் கோரிக்கைகளை கூறாமல் ஊடகத்தின் முன் கோரிக்கைகளை கூறி ஸ்ட்ரைக் துவங்கி எங்களை பிளாக்மெயில் செய்கிறார்கள் என கூறினார்கள். ஒரு அதிகாரி இதன் பின் சதித்திட்டம் உள்ளது என அப்போதே கூறினார்.
பேச்சுவார்த்தை சுமூகம்
பின்னர் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. கோபம் இருந்தாலும், ஒரு கோரிக்கை தவிர மற்ற கோரிக்கைக்களுக்கு வங்கதேச கிரிக்கெட் போர்டு அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனர். இதன் பின்னும் சில வங்கதேச வீரர்கள் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்தது.
நாசவேலை நடக்கும்
இந்த நிலையில் தான், வங்கதேச கிரிக்கெட் போர்டு தலைவர் நஜ்முல் ஹாசன் இந்திய கிரிக்கெட் தொடரை குறி வைத்து பெரிய சதித் திட்டம் நடக்க உள்ளதாக கூறி அதிர வைத்துள்ளார்.
என்ன சொன்னார் தலைவர்?
பெங்காலி பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர் கூறிய அதிர வைக்கும் தகவல் இது தான் - ஊடகம் இந்திய சுற்றுப்பயணத்தை பற்றி எதையும் தெரிந்து கொள்ளவில்லை. சற்று பொறுத்திருந்து பாருங்கள். இந்திய சுற்றுப்பயணத்தை நாசமாக்க சதித் திட்டம் நடந்து வருகிறது என்ற குறிப்பிட்ட தகவல் என்னிடம் உள்ளது. அது நடக்கும் போது நீங்கள் என்னை நம்புவீர்கள் என்றார்.
தமிம் இக்பால் விடுப்பு
தன் இரண்டாவது குழந்தை பிறப்பை எதிர்பார்த்து இருக்கும் தமிம் இக்பால், முதலில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் தனக்கு விடுப்பு வேண்டும் என கேட்டார். ஆனால், ஸ்ட்ரைக் சந்திப்புக்குப் பின் திடீரென என் அறைக்கு வந்து தான் இந்த தொடரில் இருந்தே விலகப் போவதாக கூறினார். ஏன் என்று கேட்ட போது, "நான் போகவில்லை" என்று மட்டும் கூறினார்.
கடைசி நேரம்
இந்த சம்பவத்திற்குப் பின் கடைசி நேரத்தில், எங்களுக்கு வேறு வாய்ப்பே இல்லாத போது, யாராவது நான் ஆடமாட்டேன் என கூறினால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இது குறித்து நான் கேப்டன் ஷகிப் உடன் சந்திக்க இருக்கிறேன்.
கேப்டனுக்கு எங்கே போவேன்?
ஷகிப் அல் ஹசனும் கடைசி நேரத்தில் விலகினால், நான் எங்கே போய் கேப்டனை கண்டுபிடிப்பேன்? மொத்த அணியையும் நான் மாற்றி ஆக வேண்டும். இந்த வீரர்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? என்று கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார் நஜ்முல் ஹாசன்.
தினமும் பேசுகிறேன்
என்னால் இப்போதும் நம்ப முடியவில்லை. நான் அவர்களிடம் தினமும் பேசுகிறேன். அவர்கள் நாங்கள் ஸ்ட்ரைக் அறிவிக்கப் போகிறோம் என்பதை கூட என்னிடம் கூறவில்லை. அவர்கள் கேட்ட கோரிக்கைகளுக்கு நான் ஒப்புக் கொண்டு இருக்கக் கூடாது என்றும் கூறி தன் ஆதங்கத்தை கூறினார் நஜ்முல் ஹாசன்.
அடுத்து என்ன?
வங்கதேச அணி வரும் அக்டோபர் 25 அன்று இந்தியா வர உள்ளது. நஜ்முல் ஹாசன் கூறுவதை வைத்துப் பார்த்தால், இந்தியா வரும் முன் வேறு வீரர்கள் விலகுவார்களா? அல்லது தொடர் நடக்கும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.