தார்பாலின் கவர்கள்
கிரிக்கெட் போட்டிகளின் இடையே மழை பெய்யும் போது, மைதானத்தை தார்பாலின் கவர்கள் கொண்டு மூடுவது வழக்கமாக உள்ளது. பொதுவாக, ஆடுகளத்தில் பிட்ச் தான் முக்கிய பகுதி. எனவே, பிட்ச்சை பாதுகாக்கும் வகையில், அதை மட்டும் கவர்கள் கொண்டு மூடுவது வழக்கம்.
இந்தியாவில்..
பின்னர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் முழு மைதானத்தையும் தார்பாலின் கவர்கள் கொண்டு மூடினர். இதற்கு முக்கிய காரணம், பிட்ச் மட்டுமல்லாது, அவுட் பீல்ட்டில் தண்ணீர் தேங்கி மோசமாக இருந்தாலும் போட்டியை துவங்க முடியாது.
துவங்க முடியாத நிலை
ஆனால், உலகக்கோப்பை தொடர் நடந்து வரும் இங்கிலாந்து நாட்டில், மழை நேரத்தில் பிட்ச்சை மட்டுமே கவர்கள் கொண்டு மூடி வருகின்றனர். இதனால், அவுட் பீல்டு மிக மோசமாக பாதிக்கப்பட்டு, மழை நின்றாலும் போட்டியை துவங்க முடியாத நிலை இருக்கிறது.
இதுதான் காரணம்
இது தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்தியா - நியூசிலாந்து போட்டி மட்டுமல்லாமல், மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது குறித்து பேசிய அனில் கும்ப்ளே, ஆடுகளத்தின் சில பகுதிகளில் மட்டுமே மூடப்பட்டு இருக்கும் கவர்களின் மேல் இருக்கும் தண்ணீர், கீழே வடிகிறது. அது தான் அவுட் பீல்டில் தண்ணீர் தேங்க முக்கிய காரணம் என்றார்.
கும்ப்ளே கேள்வி
ஏற்கனவே, இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடரின் போது மழை வரும் என தெரிந்தும், அதிக கவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு மைதானம் முழுவதும் மூடி இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டு இருக்காது. அதை ஏன் செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார் கும்ப்ளே.
சில பகுதிகள் மட்டுமே
ஆடுகளத்தின் சில பகுதிகளை மட்டும் நல்ல பெரிய கவர்கள் கொண்டு மூடுகிறார்கள். அதனால் அந்த பகுதி மிகவும் நன்றாக இருக்கிறது. ஆனால், பந்து வீசும் பகுதி தவிர்த்து மற்ற இடங்கள் எல்லாம் ஈரமாக, தண்ணீர் தேங்கி இருக்கிறது என்றார்.
அடிப்படை விஷயம்
அனில் கும்ப்ளே கூறுவது போல, சில கவர்கள் மட்டுமே பயன்படுத்துவதால் அதன் மேல் உள்ள மழை நீர், ஆடுகளத்தின் பிற பகுதிகளில் வடிந்து, அந்த இடத்தை மோசமாக மாற்றி விடுகிறது. இது ஒரு அடிப்படை விஷயம் தான். இதிலேயே இங்கிலாந்து சொதப்பியுள்ளது.