முதல் டி20 போட்டி
இந்தியா - இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நடைபெற இருந்த கவுஹாத்தி மைதானத்தில் மதியம் முதல் மழை பெய்தது, எனினும், போட்டி துவங்க சில மணி நேரம் முன்பு மழை நின்றது.
டாஸ்
எனவே, டாஸ் போடப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. எதிர்பாராவிதமாக அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் மழை பொழிந்தது. அதனால், ஆடுகளம் மூடப்பட்டது.
சீரமைக்கும் பணி
பின் மழை விட்ட போது ஆடுகளம் மற்றும் அதை சுற்றி உள்ள புல்வெளிப் பகுதிகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. ஆடுகளத்தை பரிசோதித்த அம்பயர்கள் மற்றும் கேப்டன் விராட் கோலி ஆடுகளத்தில் தண்ணீர் உட்புகுந்து இருப்பதை சுட்டிக் காட்டினர்.
அயர்ன் பாக்ஸ்?
ஆடுகளத்தில் இறங்கிய நீரை காய வைக்க வாக்குவம் கிளீனர், சூப்பர் சோப்பர் போன்ற பெரிய உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டும் எந்த பயனும் இல்லை. அப்போது அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் போன்றவை மூலம் ஆடுகளத்தை சீர் செய்ய முயன்றது கேலிக் கூத்தாக அமைந்தது.
அதிர்ச்சி
அதைக் கண்ட முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினர். ஜாகிர் கான், விவிஎஸ் லக்ஷ்மன், ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் தங்கள் விமர்சனத்தை முன் வைத்தனர்.
உறைகளில் ஓட்டை
குறிப்பாக, ஆடுகளத்தை மூட பயன்படுத்தப்பட்ட உறைகளில் ஓட்டை இருந்ததாலோ அல்லது அதை நீக்கிய போது சரியாக கையாளாமல் விட்டதாலோ தான் ஆடுகளத்துக்குள் தண்ணீர் இறங்கியதை சுட்டிக் காட்டினர்.
யாராலும் சிந்திக்க முடியாது
ஜாகிர் கான் கூறுகையில், "ஆடுகளத்தில் தண்ணீர் இருந்தால் அது போட்டியின் தன்மையை மாற்றி விடும். எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். மழை நின்று விட்டது. இந்த காலத்தில் மழை நீர் உறைகளின் வழியே கீழே இறங்கும் என்பதை யாராலும் சிந்தித்து பார்க்க முடியாது" என்றார்.
ஏமாற்றம்
மேலும், "ஆனால், உண்மையில் என்ன நடந்தது என தெரியாமல் இருப்பது ஏமாற்றமாக உள்ளது. ஒருவேளை ஆடுகளம் சரியாக மூடப்படாமல் போயிருக்கலாம். ஏனெனில், உறைகளை சரியான முறையில் நீக்கவில்லை என்பது போன்ற விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை" என்றார் ஜாகிர் கான்.
சிறுவர்கள் தவறு
ஆகாஷ் சோப்ரா கூறுகையில், "ஆடுகளத்தை சுற்றி இருந்த வெளிப்பகுதி காய்ந்து இருந்தது. ஆனால், சிறுவர்கள் செய்யும் தவறு போன்ற ஒன்றால், ஆடுகளத்துக்குள் தண்ணீர் புகுந்தது. உறைகளில் சில ஓட்டைகள் இருந்திருக்கலாம். ஒரு சர்வதேச போட்டியில் இது மிக மோசமான தயார்நிலை ஆகும்" என்றார்.
விவிஎஸ் லக்ஷ்மன் அதிர்ச்சி
விவிஎஸ் லக்ஷ்மன் கூறுகையில், உறை வழியாக மழை நீர் உள்ளே இறங்குவது என்பது அடிப்படை தவறு என குறிப்பிட்டு தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். ஹேர் டிரையர் மற்றும் அயர்ன் பாக்ஸ் ஆகியவற்றை பயன்படுத்தியதை ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்தது தனிக்கதை. இனியாவது பிசிசிஐ இது போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துமா?