வொர்சஸ்டர், இங்கிலாந்து: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான 4 நாட்கள் கொண்ட அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் 253 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ தோல்வியை தழுவியது.
இந்திய அணியில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தேர்ந்து எடுக்கப்பட்ட முரளி விஜய்,ர ஹானே, கருண் நாயர் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணியில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் குக், மாலன், கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன் மற்றும் ஜோ பர்ன்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஏ அணிக்கு கருண் நாயர் தலைமை தாங்கினார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 423 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. குக் அபாரமாக விளையாடி 180 ரன்களை குவித்தார். மாலன் மற்றும் குப்பின்ஸ் தலா 74 மற்றும் 73 ரன்களை எடுத்தனர். இந்திய ஏ அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ப்ரித்வி ஷாவ் மற்றும் ரிஷப் பந்த் அரைசதம் அடித்தனர். ரஹானே 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து லயன்ஸ் தரப்பில் கர்ரன் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய ஏ அணிக்கு வெற்றி இலக்காக 421 ரன்கள் நிர்ணயிப்பட்டது.
இரண்டாவது இன்னிங்ஸை ஆடத்தொடங்கிய இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட் ஆகி வெளியேறினர். ரிஷப் பந்த் மட்டும் ஒரு முனையில் சிறப்பாக ஆடி 61 ரன்களை குவித்தார். ரஹானே 48 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் இந்திய ஏ அணி 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 253 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டி ரஹானே,விஜய் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கும்வகையில் அவர்களையும் அணியில் சேர்த்து விளையாடப்பட்டது. ஆனால் முரளி விஜய் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 8 ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றினார். ரஹானே இரண்டு முறை அரை சதம் அடிக்கும் வாய்ப்பினை பெற்றும் அதனை பயன்படுத்திக்கொள்ள தவறினார். இப்போட்டியில் ஒரே ஆறுதல் ரிஷப் பந்தின் சிறப்பான ஆட்டமேயாகும். அவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.