டெல்லி: அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் கூறியுள்ளார்.
37 வயதான கம்பீர் இடது கை தொடக்க ஆட்டக்காரர் ஆவார். 2007 டி20 மற்றும் 2011 ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற அணியில் முக்கிய உறுப்பினராக இருந்தவர். சில காலமாகவே இந்திய அணியில் சேர்க்கப்படாமல் இருந்து வந்தார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் ஆடி வந்தார் கம்பீர்.
இன்று தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு நிரந்தரமாக குட்பை சொல்லியுள்ளர். இதுகுறித்து தனது டிவிட்டரில் கம்பீல் கூறியுள்ளதாவது:
The most difficult decisions are often taken with the heaviest of hearts.
— Gautam Gambhir (@GautamGambhir) December 4, 2018
And with one heavy heart, I’ve decided to make an announcement that I’ve dreaded all my life.
➡️https://t.co/J8QrSHHRCT@BCCI #Unbeaten
கனத்த இதயத்துடன்தான் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையிலும், நானும் கனத்த இதயத்துடன், எனது வாழ்க்கையின் மிகவும் கடினமான ஒரு முடிவை அறிவித்துள்ளேன் என்று கூறியுள்ள கம்பீர் ஒரு வீடியோ செய்தி மூலம் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
கம்பீர், இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக வலம் வந்தவர் ஆவார். இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகள் (4154 ரன்கள்), 147 ஒரு நாள் போட்டிகள் (5238 ரன்கள்), 37 டி20 போட்டிகள், 197 முதல் தர போட்டிகளில் (15,041 ரன்கள்) ஆடியுள்ளார் கம்பீர்.
டெல்லியைச் சேர்ந்த கம்பீர், கடைசியாக இந்தியாவுக்காக ஆடியது 2016ல், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்தான். இந்தியா டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தபோது இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் கம்பீர்.
ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் கம்பீர். ஐபிஎல் தொடரில் டோணி, ரோஹித் சர்மாவுக்கு அடுத்த வெற்றிகரமான கேப்டன் கம்பீர்தான்.
கம்பீர் இந்திய கிரிக்கெட்டின் மறக்க முடியாத ஒரு கம்பீர வீரர் என்பதில் சந்தேகம் இல்லை.