டி20 முதல் போட்டி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா வெற்றி கொண்ட நிலையில் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் துவக்க வீரராக ரோகித் சர்மா களமிறங்குவார் என்று விராட் கோலி நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
ரோகித்துக்கு ஓய்வு
ஆனால் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. துவக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கி விளையாடினர். இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
பார்ட்னர்ஷிப்பில் ரன்குவிப்பு
அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராட் கோலி, ரிஷப் பந்த் உள்ளிட்டவர்களும் சொதப்பிய நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் கைகொடுத்தார். பாண்டியாவுடன் இணைந்து அவர் பார்ட்னர்ஷிப்பில் ரன்களை குவித்தார். ஆனால் 67 ரன்களை எடுத்து இறுதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.
ரசிகர்கள் அதிருப்தி
இந்நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறாதது குறித்து ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை செய்து வருகின்றனர். கடந்த 2020ல் ரோகித் சர்மா ஆடிய இறுதி சர்வதேச டி20 போட்டிகளில் 65 மற்றும் 60 ரன்களை அடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.