உலகக்கோப்பை தொடர்
இந்தியா இதுவரை நான்கு முறை அண்டர் 19 உலகக்கோப்பை வென்றுள்ளது. மேலும், நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்தியா தொடர் வெற்றிகளை குவித்து வந்தது. அதனால், இந்தியா இறுதிப் போட்டியில் எளிதாக வெல்லும் என்று கருதப்பட்டது. அதே சமயம், வங்கதேசம் உலக அளவிலான விளையாட்டுத் தொடரில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் காலடி எடுத்து வைத்து இருந்தது.
டாஸ் வெற்றி
இந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் வங்கதேசம் டாஸ் வென்றது. அந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தப் போட்டியில் மழை குறுக்கிடலாம் என்பதால் இந்த முடிவை எடுத்தது அந்த அணி. மேலும், பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது.
இந்தியா நிதான பேட்டிங்
இந்தியா துவக்கத்தில் படு நிதான பேட்டிங் ஆடியது. முதல் 10 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்தது. துவக்க வீரர் சக்சேனா 17 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அந்த அளவுக்கு ரன் அடிக்க முடியாத படி பந்து வீசியது வங்கதேச அணியின் இளம் படை.
ஜெய்ஸ்வால் - திலக் வர்மா ஜோடி
பின்னர் ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் - திலக் வர்மா, நிதான ஆட்டம் ஆடி அணியை காப்பாற்ற போராடினர். விக்கெட் விழாவிட்டாலும், அவர்களால் எளிதாக ரன் குவிக்க முடியவில்லை. திலக் வர்மா 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ப்ரியம் கார்க் 7, துருவ் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
ஜெய்ஸ்வால் அபாரம்
ஜெய்ஸ்வால் மட்டுமே பிட்ச்சின் தன்மையை சரியாக புரிந்து கொண்டு நிதான ஆட்டம் ஆடி அரைசதம் கடந்தார். அவர் 88 ரன்கள் குவித்த நிலையில், ஆட்டமிழந்தார். அது இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. அப்போது 156 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது இந்திய அணி.
விக்கெட் சரிவு
அதன் பின், விக்கெட்கள் சீட்டுக் கட்டாக சரிந்தது. இந்தியா 47.2 ஓவர்களில் 177 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இத்தனை மோசமான ஆட்டத்தை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. எனினும், பிட்ச் மீது இருந்த நம்பிக்கையுடன் இந்தியா பந்துவீச வந்தது.
அதிரடி துவக்கம்
178 ரன்கள் என்ற சிறிய இலக்கை நோக்கி அதிரடியாக ஆடத் துவங்கியது வங்கதேசம். துவக்க வீரர்கள் இமோன், ஹாசன் அதிரடியாக துவக்கி, பின் நிதான ஆட்டம் ஆடினர். ஹாசன் 17 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து ஜாய், ஹிரிதோய் ஷாஹத் ஹுசைன் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.
ரவி பிஸ்னோய் மிரட்டல்
இந்திய அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஸ்னோய் மட்டுமே தனியாக முதல் நான்கு விக்கெட்களை வீழ்த்தி, இந்திய அணி பக்கம் போட்டியை எடுத்து வந்தார். 65 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தவித்தது வங்கதேசம்.
மழை குறுக்கீடு
பின்னர் 143 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த அந்த அணிக்கு கேப்டன் அக்பர் அலி மட்டும் நம்பிக்கை அளித்து நிதான ஆட்டம் ஆடி வந்தார். இடையே 41 ஓவர்கள் முடிவில் மழை குறுகிட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 3 விக்கெட்களும், வங்கதேச அணிக்கு 15 ரன்களும் தேவை என்ற நிலையில் மழை வந்தது.
உலகக்கோப்பை வெற்றி
பின் மழை சில நிமிடங்களில் நின்றது. போட்டி 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு, வெற்றி இலக்கு 170 ரன்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, வங்கதேசம் 7 ரன்கள் எடுத்து 42.1 ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அக்பர் அலி 43 ரன்கள் எடுத்து கடைசி வரை அணிக்கு தூணாக நின்றார்.
முதல் உலகக்கோப்பை வெற்றி
வங்கதேச அணி கிரிக்கெட் உட்பட, எந்த விளையாட்டிலும் உலக அளவிலான தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இந்த நிலையில், அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்றதோடு ஆதிக்கம் செலுத்தி வலுவான இந்திய அணியை வீழ்த்தி தன் முதல் கிரிக்கெட் உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது குட்டிப் புலிகள் அணி.