ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் கிரிக்கெட் தொடர்கள் நவம்பர் 27 முதல் துவங்க உள்ளன. ஒருநாள் தொடர், டி20 தொடரை அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இது முக்கியமான தொடராக கருதப்படுகிறது.
இஷாந்த் சர்மா காயம்
டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம் பெறும் வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் அடைந்துள்ளார். அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் இந்திய அணியில் இணைவாரா? என்பது கேள்விக் குறியாக உள்ளது. அவர் இல்லாமல் இந்திய அணியின் வேகப் பந்துவீசி பலவீனம் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.
பும்ரா, ஷமி அவசியம்
இந்த நிலையில், மற்ற இரு முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் முகமது ஷமி அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனாலேயே அவர்களால் அதற்கு முன் நடைபெற உள்ள ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் முழுமையாக பங்கேற்க முடியாது.
காயம் ஏற்பட வாய்ப்பு
மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் 12 நாட்கள் இடைவெளியில் நடைபெற உள்ளது. அதில் தொடர்ந்து பங்கேற்றால் ஷமி, பும்ராவுக்கு சோர்வு அல்லது காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது டெஸ்ட் போட்டிகளின் போது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஓய்வு
எனவே, பும்ரா, ஷமிக்கு ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் முழுமையாக பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படாது. அவர்கள் மாற்றி, மாற்றி ஓய்வில் இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஒருநாள் போட்டியில் ஆடி விட்டு பின் டி20 தொடரில் அவர்கள் ஓய்வு எடுக்க அதிக வாய்ப்பு உள்ளது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இந்த நிலையில் டி20 தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நடராஜன், நவ்தீப் சைனி, தீபக் சாஹர் உள்ளிட்டோர் போட்டிகளில் ஆடும் வாய்ப்பை பெறுவார்கள். இஷாந்த் சர்மா டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க தன் உடற்தகுதியை முன்னேற்ற வேண்டும் என்பதால் கடும் பயிற்சி செய்து வருகிறார்.