ரவி சாஸ்திரிக்கு கொரோனா
கொரோனா காரணமாக இந்திய அணி முழுவதும் அடிக்கடி கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுமட்டுமல்லாமல் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த பிசியோ தெரபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
எப்படி கொரோனா பரவியது
இவர்களுக்கு எங்கிருந்து கொரோனா பரவியது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணி தங்கியிருந்த ஹோட்டலில் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் இந்திய அணி கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட இந்திய வீரர்கள் அனைவரும் கலந்துக்கொண்டுள்ளனர். பயோபபுள் பாதுகாப்புக்குள் இருந்த வீரர்கள், வெளியுலக மக்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்து தான் தொற்று பரவியுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஆத்திரத்தில் பிசிசிஐ
இந்நிலையில் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது பிசிசிஐ கடும் அதிருப்தியடைந்துள்ளது. பிசிசிஐ ஏற்பாடு செய்யாத நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணி யாரை கேட்டு கலந்துக்கொண்டது. முறையான அனுமதியையும் பிசிசிஐ-யிடம் பெறவில்லை. பயோ பபுள் விதிமுறைகளை மீறி கோலியும், ரவி சாஸ்திரியும் இதனை செய்துள்ளனர். எனவே இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என இருவருக்கும் பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் பிசிசிஐ
இதில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் இந்திய அணி முறையான அனுமதி பெறவில்லை எனத் தெரிகிறது. இது அடுத்து வரும் 5வது டெஸ்ட் போட்டிக்கே பாதிப்பு என்பதால், இங்கிலாந்து வாரியத்திடம் பிசிசிஐ தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டு பயோ பபுள் சூழலுக்கு கொண்டு வந்துள்ளனர்.