ஹம்பந்தோடா: இலங்கைக்கு எதிரான 2வது யூத் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தி்ல இந்தியா வென்றது. இதன் மூலம் 2-0 என தொடரை வென்றது.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. அங்கு 2 போட்டிகள் கொண்ட யூத் டெஸ்ட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு தினப் போட்டித் தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடந்த முதல் யூத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹம்பந்தோடாவில் நடந்தது. இதில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தி்ல வென்று, தொடரைக் கைப்பற்றியது.
இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. துவக்க ஆட்டக்காரர் அதர்வா தைடே 172 பந்துகளில் 20 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 177 ரன்கள் எடுத்தார்.
18 வயதாகும் பவன் ஷா 332 பந்துகளில் 33 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 282 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், இளைஞர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்தார் ஷா. மேலும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரரானார்.
இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 316 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பசிண்டு சூர்யபண்டாரா 115 ரன்கள் அடித்தார். இந்திய அணியில் மோஹித் ஜாங்ரா 4, யதின் மங்க்வானி, ஆயுஷ் போதானி, சித்தார்த் தேசாய் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
ஃபாலோ ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சித்தார்த் தேசாய் 4, யதின் மங்க்வானி, ஆயுஷ் போதானி தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்., இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்களில் இந்தியா வென்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரையும் வென்றது.