குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது.. கோஹ்லிக்கு கிர்மானி "நறுக்"
பெங்களூரு: கேப்டன் டோணிக்கு முன்னாள் இந்திய விக்கட் கீப்பர் சையத் கிர்மானி முழு ஆதரவு தெரிவித்துள்ளார். கேப்டன் என்றால் இவரைப் போலத்தான் இருக்க வேண்டும். மைதானத்தில் குரங்குச் சேட்டை செய்பவர் கேப்டனாக இருக்க முடியாது என்றும் அவர் மறைமுகமாக விராத் கோஹ்லியை கண்டித்துள்ளார்.
வருங்காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக வருபவர்கள், டோணியைப் பின்பற்ற வேண்டும் என்றும் கிர்மானி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்த கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் கிர்மானி. ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:

டோணிதான் பெஸ்ட்
கேப்டன் பதவிக்கு டோணிதான் மிகச் சரியானவர். பொருத்தமானவர். அவரது கேப்டன் பதவி குறித்து கேள்வி எழுப்புவோர் குறுகிய மனம் படைத்தவர்களாகவே இருக்க முடியும்.

மைதானத்தில் குதிப்பது தவறு
மைதானத்தில் விராத் கோஹ்லி போல ஆக்ரோஷமாக இருப்பது சரியா என்று கேட்டால் தவறு என்றுதான் நான் சொல்வேன். என்னைப் பொறுத்தவரை கேப்டன் என்பவர் ஒரு நாட்டின் தூதர் போல.

ஒழுங்கு அவசியம்
ஒழுங்கீனமாக அவர் நடந்து கொள்ளக் கூடாது. ஒழுக்கம் முக்கியம். டோணி அதை மிகச் சரியாக பேணிக் காத்து வருகிறார். வருங்கால இந்திய கேப்டன்களுக்கு அவர் சரியான முன்னுதாரணமாக திகழ்கிறார்.

குரங்குச் சேட்டை தவறு
கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. டோணி ஒரு ஜென்டில்மேன். மைதானத்தில் நீங்கள் குரங்கு போலத் தாவக் கூடாது. கேட்ச் பிடித்ததும் தாவக் கூடாது, குதிக்கக் கூடாது. கத்தக் கூடாது.

அதெல்லாம் அங்க மட்டும்தான்
கால்பந்து வி்ளையாட்டில்தான் அதெல்லாம் நடக்கும். ஆனால் இது கிரிக்கெட். இது ஜென்டில்மேன்களின் ஆட்டம். இங்கு அது கூடவே கூடாது. கிரிக்கெட்டை கால்பந்துக் களமாக்கக் கூடாது.

பட்டோடிக்குப் பிறகு
என்னைப் பொறுத்தவரை மன்சூர் அலி கான் பட்டோடிக்குப் பிறகு இந்தியா கண்ட மிகச் சிறந்த ஜென்டில்மேன் கிரிக்கெட் கேப்டன் டோணிதான். பட்டோடி ஒரு ஜீனியஸ். அவரது கீழ் விளையாட முடியாமல் போனது எனக்கு இப்போது கூட வருத்தம்தான் என்றார் கிர்மானி.


Click it and Unblock the Notifications