தாயகம் திரும்பினர்
இப்படிப்பட்ட சூழலில்தான், ஆஸ்திரேலிய பயணத்தை முடித்து விட்டு இந்திய வீராங்கனைகள் மும்பை திரும்பினர். ஆனால் அவர்களை வரவேற்க விமான நிலையத்தில் யாருமே இல்லை. மும்பை விமான நிலையம் வந்து சேர்ந்த வீராங்கனைகள் முகத்தில் இன்னும் ஏமாற்றம் அப்பிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.
வேதா கிருஷ்ணமூர்த்தி
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஆல் ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சோகமான முகத்துடன் காணப்பட்டனர். அவர்களை வரவேற்க கூட்டம் ஏதும் இல்லை. படு சாதாரணமாக வீராங்கனைகள் காணப்பட்டனர். கண்டிப்பாக இது ஏமாற்றம்தான். அவர்கள் இறுதிப் போட்டி வரை முன்னேறியதையும், அருமையான சில போட்டிகளை ஆடியதையும் நிச்சயம் ரசிகர்கள் பாராட்டியிருக்க வேண்டும்.
இதுவே சாதனைதானே
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உலகக் கோப்பை டி 20 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறியது என்பது நினைவிருக்கலாம். இருப்பினும் இதை இந்திய ரசிகர்கள் பெரிதாக கருதவில்லை போலும். இந்த ஏமாற்றம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். யாராவது சிலர் வந்து வீராங்கனைகளை வாழ்த்தியிருக்கலாம் என்று பலரும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.
கெளரவிக்கவில்லையே
இதற்கிடையே ஹரியானாவைச் சேர்ந்த இளம் புயல் ஷெபாலி வர்மாவுக்கு அவரது சொந்த மாநிலத்திலேயே எந்த பாராட்டும் கிடைக்கவில்லை. அவர் இந்தத் தொடரில் அசத்தலாக ஆடியிருந்தார். அவரது சிக்ஸர்கள் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டுப் போகவில்லை. ஆனால் ஹரியானா அரசு எந்த வகையான பாராட்டையும், கெளரவத்தையும் இதுவரை அறிவிக்கவில்லை.