மாறிய அணி வரிசை
அவற்றில் முக்கியமாக பார்க்கப்பட்டது நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5ம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும், அதன்பின், பாண்டியாவையும் இறக்கியது ஆகும். உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை, 2 வீரர்கள் காயத்தால் விலகியும் அணியில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.
விரைவில் விசாரணை
உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து, மறு ஆய்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளது.
2 அணிகள்
இந்நிலையில், ரோகித் மற்றும் கோலி தலைமையில் இந்திய வீரர்கள் இரண்டு குழுக்களாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமான, அணியின் தூண்கள் என்ற பட்டியலில் இவர்கள் இருவரும் உள்ளதால், அணியில் இருந்து தூக்கப்படுவது நடக்காது.
கோலிக்கு நெருக்கம்
மற்றவர்களில் ராகுல், சாஹல் (இவர் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்) இருவரும் கோலிக்கு நெருக்கமான வீரர்கள் என்றும், சரியாக விளையாட வில்லை என்றாலும் அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்தனர் என்றும் தெரிகிறது. இஷ்டம் போல செயல்படும் கோலியின் மனநிலை தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மோதல் போக்கு
பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயின் ஆதரவு பெற்றுள்ளதால், கோலியை அவர் கேள்வி கேட்பது இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரவி சாஸ்திரியிடமும் கோலி மோதல் போக்கை கடைபிடித்திருந்தார். முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கோலி அதிருப்தி அடைந்து, பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனதும் என்பதை உற்று பார்க்க வேண்டும்.
உருவாக காரணம்
இது தவிர கோலிக்கும், ரோகித்துக்கும் இருக்கும் உரசல்கள் காரணமாக அணியின் வீரர்கள் 2 குழுக்களாக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஐபிஎல்லில் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி மண்ணை கவ்வியது. ஆனால், கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது. இதுவும் 2 குரூப்புகள் உருவாக காரணம் என்று நம்பப்படுகிறது.