மும்பை: ஐபிஎல் போட்டிகள் தொடர்பான சூதாட்டத்தில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்குவதாக கூறப்படுகிறது. இதன் கிங்பின் இருப்பது துபாயில் என்பதும், ஒரு சில வீரர்களை வளைத்துவிட்டால், மொத்த போட்டியையும் மாற்றிவிடலாம் என்பதும் இந்த சூதாட்டத்தின் சூத்திரங்கள்.
ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடக்கூட, அதன்மீதான சூதாட்ட மதிப்பும் கூடிக்கொண்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் ஐபிஎல் தொடர்பான சூதாட்டங்களில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு பணம் புழங்கியுள்ளதாக கூறுகின்றனர் அமலக்கப்பிரிவு அதிகாரிகள்.
பெயர் வெளியிடப்பட விரும்பாத சூதாட்டக்காரர் ஒருவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், ஆண்டுக்கு ஆண்டு, சூதாட்டத்துக்கான பணம் மதிப்பு கூடிக்கொண்டே செல்கிறது. கிரிக்கெட் இருக்கும்வரை பெட்டிங்கும் இருந்தே தீரும்.
சூதாட்டம் நடைபெற்றாலும்கூட, ஒட்டுமொத்த போட்டியே நிர்ணயிக்கப்பட்டதாக அமைவதில்லை. ஏனெனில் போட்டியின் முடிவை முன்கூட்டியே நிர்ணயிப்பதற்காக தக்க நபர்களை சரிகட்டுவது இயலாத காரியம். ஆனால், போட்டியின் குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடக்கும் என்பதை வைத்து சூதாடுவது எளிது.
உதாரணத்துக்கு 10 ஓவர்களில் இருந்து 15வது ஓவருக்குள் இத்தனை ரன்கள் அடிக்கப்பட வேண்டும், இத்தனை விக்கெட்டுகள் விழுந்தாக வேண்டும் என்பது போன்ற செஷன்ஸ் அடிப்படையிலான சூதாட்டம் கொஞ்சம் எளிது. இதற்கு ஒரு சில வீரர்களை கைக்குள் போட்டுக்கொண்டால், சூதாட்டத்தில் ஜெயித்துவிடலாம்.
துபாயில் இருந்துதான் எங்களுக்கு ஆர்டர்கள் வரும். தாங்கள் விரும்பியபடி நடக்க துபாயிலுள்ள அந்த பார்ட்டிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். துபாயில் இருந்தபடிதான், குறிப்பிட்ட செஷனில் எத்தனை ரன் அடிக்கப்பட வேண்டும், எத்தனை விக்கெட்டுகள் வீழ வேண்டும் என்பது குறித்து, தகவல்கள் வரும்.
டி20 போட்டிகளில்தான் அதிக சூதாட்டம் புழங்குகிறது. ஆனால், ஒருநாள் போட்டிகளிலும் நடைபெறாது என்று கூற முடியாது. அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் கொஞ்சம் குறைவுதான். டெஸ்ட் போட்டிகளுக்கான சூதாட்டத்தில், பண மதிப்பும் மிக குறைவாகவே இருக்கும். இவ்வாறு அந்த சூதாட்ட தரகர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது "இந்தியாவிலுள்ள சூதாட்டக்காரர்கள் சமூகமாக செயல்படுவதற்காகவே, தனித்தனி குழுக்களை துபாய் குரூப் அமைத்துள்ளது. டெல்லியுள்ள குழு, ஜெய்ப்பூரிலுள்ள குழுவுடன் தொடர்பு கொள்ளாது. ஆனால், பெட்டிங் சமூகமாக நடக்கவும், ரகசியம் வெளியே தெரியாமல் பாதுகாக்கவும் இந்த குழுக்கள் பயன்படும். அதிகப்படியான நபர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்த அவர்கள்விரும்புவதில்லை. அதிகப்படியான நபர்கள் இறங்கினால் ரகசியங்களும் எளிதில் வெளியே போய்விடும் என்பது அவர்கள் பயமாகும்" என்று கூறினர்.
சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் நபர்கள் அதுபோன்ற சூதாட்டத்தை அனுமதிக்கும் நாடுகளில் இருந்து செயல்படும்போது, இந்திய அதிகாரிகளால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. ஆனால் பெட்டிங் எனப்படும் முடிவுகள் மீதான, சூதாட்டத்துக்குதான் சில நாடுகள் அனுமதித்துள்ளதே தவிர, போட்டியை ஃபிக்ஸ் செய்ய எந்த நாட்டிலும் அனுமதி கிடையாது. போட்டி முழுக்க ஃபிக்ஸ் செய்யப்பட்டது தெரியவந்தால், அப்போது நடவடிக்கைகள் பாயலாம்.