'டோணி மிகச்சிறந்த விளையாட்டு வீரர்' புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி உரிமையாளர் புகழாரம்
ஹைதராபாத்: மகேந்திர சிங் டோணி, மிகச்சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்றும், அவர் இல்லாவிட்டால், புனே அணியை வெற்றிகரமான கிரிக்கெட் அணியாக நிலைநிறுத்தியிருக்க முடியாது என்றும், அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பாராட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் சீசன் போட்டிகளில், ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
முதல்முறையாக, அந்த அணி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில், இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது டோணியால்தான் சாத்தியமானது என்று பூரிக்கிறார்கள் புனே அணி ரசிகர்கள்.
மீண்டும் டோணி அதிரடியில் புனே நிமிர்ந்து நிற்கிறது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அந்த அளவுக்கு டோணி அதிரடி காட்டியுள்ளதை மறக்க முடியாது என்கிறார்கள் புனே ரசிகர்கள்.

மகிழ்ச்சியில் கோயங்கா
இதுபற்றி, அதன் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். புனே அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு, டோனி மற்றும் கேப்டன் ஸ்மித் ஆகியோரின் பங்களிப்பே முக்கிய காரணம் என்று, சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.

டோணி தான் இறுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்
மேலும் அவர் கூறுகையில், ‘'நான் சந்தித்த மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில், டோணியும் ஒருவர். அது மட்டுமின்றி, உலகிலேயே அவர்தான் சிறந்த விக்கெட் கீப்பரும் ஆவார். கேப்டன் பதவியில் இருந்து விலக்கி வைக்கப்பட்டபோதும், ஸ்மித் தலைமையில் மிகவும் ஒற்றுமையாகச் செயல்பட்டு, புனே அணியை டோனி, இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஸ்மித்துக்கு புகழாரம்
அதேபோன்று, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், எந்த நெருக்கடியான நேரத்திலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது திறமையான ஆட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாத நிலை உள்ளது.

புனே அணி வாகை சூடும்
ஒருவேளை ஃபுட் பாய்சன் ஆனால் மட்டுமே, ஸ்மித் விளையாட்டில் சோபிக்க முடியாமல் போவார் என நினைக்கிறேன். மற்றபடி, அவரை எந்த விதத்திலும் குறைகூற முடியாது. இறுதிப் போட்டியை, புனே வீரர்கள் வென்று, வாகை சூடுவார்கள் என்று ஆவலாக எதிர்பார்த்துள்ளோம்,'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications