கெயில் இல்லை
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசியது. ஆனால் ஆச்சர்யமாக, பஞ்சாப் அணியில் கெயில் இடம்பிடிக்கவில்லை. டெல்லி அணி பெரிய அளவில் வலுவுடன் இல்லை என்று கெயிலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. அந்த அணிக்கு இன்னும் வரிசையாக பெரிய அணிகளுக்கு எதிராக போட்டி இருக்கிறது என்பதால், கெயிலுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
டெல்லிக்கு சூப்பர் வாய்ப்பு
ஐபிஎல்லில் தொடர்ந்து தோல்வி அடைந்து வரும் டெல்லி அணிக்கு சிறப்பான வாய்ப்பு ஒன்று அளிக்கப்பட்டது. பஞ்சாப் வெறும் 143 ரன்களில் அவுட்டாகி, டெல்லிக்கு எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பை கொடுத்தது. எப்போதும் அதிரடியாக ஆடி, அதிக ஸ்கோர் நிர்ணயிக்கும் பஞ்சாப், இந்த முறை பேட்டிங்கில் கொஞ்சம் சொதப்பியது.
கதை வேறு மாதிரி சென்றது
ஆனால் டெல்லி அணி பேட்டிங் செய்த போது, கதை வேறுமாதிரி சென்றது. முதல் பவர்பிளே முடிவதற்குள் டெல்லி அணியின் முக்கியமான மூன்று விக்கெட்டுகளை, பஞ்சாப் பவுலர்கள் எடுத்தனர். டெல்லி அணியில் ஷ்ரேயஸ் ஐயர் மட்டும் தனியாக கஷ்டபட்டுக் கொண்டு இருந்தார். அங்கித் ராஜ்புட், டை, முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை அஸ்வின் மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அதேசமயம் அஸ்வின் மிகவும் சிறப்பாக பந்து வீசி ரன்களை கட்டுப்படுத்தினர்.
மிக சிறப்பான ஓவர்
இந்த போட்டியில் மிகவும் சிறப்பான விஷயம் என்னவென்றால், 19வது ஓவர்தான். மிகவும் மோசமாக ஓவர் போட்ட ப்ரிந்தர் ஸ்ரானுக்கு 19வது ஓவர் கொடுத்தார் அஸ்வின். அவர் ஏற்கனவே ஒரு ஓவருக்கு 12 ரன்கள் வரை கொடுத்து இருந்தார். ஆனால் அவரது அந்த ஓவர்தான் பஞ்சாப் அணியின் தலைவிதியை மாற்றியது. அதன்பின் எப்போதும் போல கடைசி ஓவரை முஜிபுர் ரஹ்மானிடம் கொடுத்தார்.
சிறந்த கேப்டன்
முதல்தடவை கேப்டனாக பொறுப்பேற்று இருக்கும் அஸ்வின் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார். எந்த மோசமான சூழ்நிலையிலும் அவர் முகத்தில் எதையும் காட்டிக்கொள்வது இல்லை. மிகவும் இக்கட்டான நிலையில் கூட இயல்பாக முடிவெடுக்கிறார். டோணியின் கீழ் வளர்ந்தவர் என்ற காரணத்தினாலேயே, அவருக்கு இருக்கும் அதே ''கூல்'' குணம் இவருக்கும் இருக்கிறது.