கொரோனா வைரஸ் தாக்கம்
2020 துவக்கம் முதல் பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிறது. பல லட்சம் பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல தொழில்களும் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. மனிதர்கள் மூலம் பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுப் போட்டிகள் ரத்து
இதனால் விளையாட்டுப் போட்டிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நாடு, நாடாக வீரர்கள் பயணம் செய்வது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில் கூடுவது, வீரர்கள் விளையாடும் போது ஒருவருடன், ஒருவர் தொடர்பு கொள்வது ஆகியவை மூலம் கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதால் விளையாட்டுப் போட்டிகள் மீண்டும் துவங்குவதில் சிக்கல் உள்ளது.
ஐபிஎல் தள்ளி வைப்பு
உலகம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2020 ஐபிஎல் தொடர் முதலில் சில நாட்கள் தள்ளி வைக்கப்பட்டு, பின் கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு சுமார் 3,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
ஐபிஎல் எதிர்பார்ப்பு
பிசிசிஐ நஷ்டத்தில் இருந்து தப்பிக்க எப்படியும் ஐபிஎல் தொடரை குறுகிய வடிவில் அடுத்த சில ஆண்டுகளில் நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஊடகங்களில் அது தொடர்பான செய்திகளும் தொடர்ந்து வெளியான வண்ணம் இருந்தது.
எந்த திட்டமும் இல்லை
இந்த நிலையில் பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பிசிசிஐ 2020 ஐபிஎல் நடத்துவது பற்றி எல்லாம் சிந்திக்கவில்லை என கூறி உள்ளார். இதுவரை எந்த திட்டமும் செய்யவில்லை எனவும் கூறி உள்ளார்.
இதெல்லாம் சாத்தியமா?
மேலும், வீரர்கள் வெளிநாட்டில் இருந்து வர வாய்ப்பு கிடைக்க வேண்டும். அப்படியே வாய்ப்புகள் இருந்தாலும், அந்த வீரர்கள் இந்தியா வர சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதன் பின் இரு வாரங்கள் தனிமையில் இருக்கவும் ஒப்புக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சாத்தியமா? இதற்கிடையே எப்படி ஐபிஎல் நடக்கும் என தெரியவில்லை எனவும் அவர் கூறி உள்ளார்
ஊடகங்களின் ஊகம்
2020 ஐபிஎல் பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகி வந்த நிலையில்,அது அனைத்தும் ஊடகங்களின் ஊகம் மட்டுமே மற்றபடி இங்கே ஒன்றுமே நடக்கவில்லை. நிலைமை சீரானால் நாங்கள் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம் என சிந்திப்போம் என கூறி உள்ளார் அருண் துமால்.
டி20 உலகக்கோப்பை நடக்குமா?
அதே போல, அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய டி20 உலகக்கோப்பை தொடரும் திட்டமிட்டபடி நடக்குமா என தெரியவில்லை என சந்தேகம் தெரிவித்துள்ளார் அருண் துமால். அதற்கு அவர் முக்கியமான காரணம் ஒன்றையும் கூறி உள்ளார்.
பயிற்சி இல்லாமல் ஆட முடியுமா?
உலகக்கோப்பை தொடர் முக்கியமான தொடர் என்பதால் நீண்ட காலம் கிரிக்கெட் ஆடாமல் இருந்து விட்டு போதிய பயிற்சி இல்லாமல் நேராக உலகக்கோப்பையில் ஆட முடியுமா? என்பதை அனைத்து அணிகளின் கிரிக்கெட் அமைப்புகளும் சிந்திக்கும் எனவும் அருண் துமால் கூறி உள்ளார்.