கடும் பாதிப்பு
கொரோனா வைரஸ் காரணமாக உலகில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் போட்டிகள் பலவும் தடைபட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் தடைபட்டுள்ளது. இந்தியாவிலும் எந்த வகையான கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.
ஐபிஎல் தள்ளி வைக்கப்பட்டது
2020 ஐபிஎல் தொடர் மார்ச் 29 அன்று துவங்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததால் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் லாக்டவுன் நீடிக்கப்பட்டதால் ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் என்ன செய்கிறார்கள்?
இந்த நிலையில், ஐபிஎல்-இல் பங்கேற்க வேண்டிய வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து நேரத்தை கடத்தி வருகிறார்கள். இந்திய அணி கேப்டன் விராட் கோலியும் தொடர்ந்து பல வீரர்களுடன் இணையத்தில் நேரலை வீடியோவில் பேசி வருகிறார்.
ஏபி டி வில்லியர்ஸ் - கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சக வீரர் ஏபி டி வில்லியர்ஸ் உடன் சமூக வலைதளத்தில் உரையாடினார் விராட் கோலி. அப்போது டிவில்லியர்ஸ் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இருவரும் சேர்ந்து உதவி செய்யலாம் என்று யோசனை கூறினார்.
க்ரீன் டே போட்டி
2016 ஐபிஎல் தொடரில் க்ரீன் டே போட்டியில் அணிந்த உடை மற்றும் உபகரணங்களை ஏலத்தில் விட்டு அதில் வரும் தொகையை கொரோனா வைரஸ் லாக்டவுனால் பாதித்த ஏழை மக்களுக்கு அளிக்கலாம் என கூறினார் ஏபி டி வில்லியர்ஸ்.
பச்சை வண்ண உடை
2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையே கிரீன் டே போட்டி நடைபெற்றது. பசுமையை பேணிக் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போட்டி அது. அந்தப் போட்டியில் பெங்களூர் அணி வீரர்கள் பச்சை வண்ண உடை அணிந்து ஆடினர்.
இணையத்தில் ஏலம்
அந்த சிறப்பு உடையை தான் ஏலத்தில் விட உள்ளனர் விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ். இந்த ஏலம் இணையத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அதில் வரும் தொகை அனைத்தும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நிதியாக வழங்க உள்ளனர்.