
இண்ட்ரா ஸ்குவாட் ஆட்டம்
அனைத்து அணிகளும் அமீரகத்திற்கு சென்று பயிற்சி முகாம்களை தொடங்கிவிட்டன. அதன்படி மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு அடுத்தபடியாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. விராட் கோலி தலைமையிலான இந்த அணி நேற்று முதல் தனது இண்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

ஏபிடி
தேவ்தத் பட்டிக்கல் தலைமையில் ஒரு அணியும், ஹர்ஷல் பட்டேல் தலைமையில் ஒரு அணியும் இதில் மோதிக்கொண்டன. பயிற்சி ஆட்டம் போல் இல்லாமல் விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் பேட்டிங் அனல் பறந்தது. குறிப்பாக அந்த அணியின் சீனியர் வீரர் டிவில்லியர்ஸ் 360 டிகிரியில் பந்துகளை பறக்கவிட்டு சதமடித்தார்.

அதிவேக சதம்
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த டிவில்லியர்ஸ் கடந்த 4 மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட்டையும் விளையாடாமல் உள்ளார். இதனால் முதலில் 19 பந்துகளுக்கு 19 ரன்களையே அடித்திருந்தார். ஆனால் அதன் பிறகு வேகமெடுத்த அவர் 46 பந்துகளில் 104 ரன்களை விளாசி அசத்தினார். அவரின் வயதிற்கும் ஆட்டத்திற்கு சம்பந்தமே இல்லை என என ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர்.

ரசிகர்கள் கிண்டல்
இது ஒருபுறம் இருக்க இந்த பயிற்சி ஆட்டத்தின் மீது விமர்சனங்களும் குவிந்து வருகிறது. ஆர்சிபி அணியின் முக்கிய வீரர்கள் யாரும் இந்த பயிற்சி போட்டியில் கலந்துக்கொள்ளவில்லை. அந்த அணியின் நட்சத்திர பவுலர்களான யுவேந்திர சாஹல், ஹசரங்கா, கெயில் ஜேமிசன், முகமது சிராஜ் ஆகியோர் குவாரண்டைனில் இருந்து வருகின்றனர். கேப்டன் கோலியும் ஆட்டத்தில் இல்லை. எனவே அனுபவமற்ற வீரர்களின் பந்துவீச்சில் சதமடித்தார் என விமர்சித்து வருகின்றனர்.

என்ன காரணம்
ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான பந்துவீச்சை கொண்ட அணியாக எப்போதும் ஆர்சிபி அணி தான் பார்க்கப்படுகிறது. 200 ரன்களுக்கு மேல் இலக்கு வைத்தாலும், அந்த அணி சுலபமாக வாரி வழங்கிவிடும். இந்தாண்டு தொடரில் தான் சற்று சிறப்பாக பந்துவீசி வருகிறது. எனவே டிவில்லியர்ஸின் சதத்தில் இருந்தே ஆர்சிபி அணியின் பந்துவீச்சை புரிந்துக்கொள்ளலாம் என கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











