சிஎஸ்கே அபார வெற்றி
இந்த போட்டி விராட் கோலி மற்றும் தோனியின் மோதலாக பார்க்கப்பட்டதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது. அதற்கேற்றார் போல தொடக்கத்தில் ஆர்சிபி அணியின் தொடக்க ஜோடி கோலி மற்றும் பட்டிக்கல் ஆகியோர் ரன் வேட்டை நடத்தினார். ஆனால் கடைசி சில ஓவர்களில் தான் ஆட்டம் விறுவிறுப்பின்றி முடிந்துவிட்டது.
சுவாரஸ்ய நிகழ்வுகள்
இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி தோல்வியை தாண்டி சில சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. அதில் முதலாவதாக இடம்பெறுவது தோனியின் ஆலோசகர் ( Mentor) பதவி தான். நேற்று டாஸ் போட்ட போதே தோனியும் விராட் கோலியும் தோளில் கைகளை போட்டுக்கொண்டு நீண்ட நேரம் ஆலோசனைகளை மேற்கொண்டனர். அப்போது தோனி சில டிப்ஸ்-களையும் வழங்கியிருந்தார். எனவே தோனி தற்போதே டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் நோக்கில் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் என ரசிகர்கள் கூறினர். புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
தோனியின் குணம்
இதில் இரண்டாவதாக தோனிக்கும் - கோலிக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் தெரியவந்தது. ஒரு போட்டி முடிந்து விட்டால், அதில் வெற்றி - தோல்வி எதுவாக இருந்தாலும் விராட் கோலி நேரடியாக ஓய்வறைக்கு சென்றுவிடுவார். இளம் வீரர்களுடன் அவர் உரையாடுவது, அறிவுரை கூறுவது என எதையும் கண்டுக்கொள்ள மாட்டார். ஆனால் நேற்று தோனி போட்டி முடிந்த பிறகும் இளம் வீரர்களுக்கு பேட்டிங் திட்டங்களை கூறிவந்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஆர்சிபி வீரர்கள் தான் தோனியிடம் அட்வைஸ் கேட்டு வந்தனர். எதிரணி வீரர்களே தோனியிடம் அட்வைஸ் கேட்கும் லெவல் அவருக்கு உள்ளது.
கெயிக்வாட் - சாஹல் மோதல்
இதில் 3வது விஷயம் என்னவென்றால் ருத்ராஜ் கெயிக்வாட் தேவையின்றி சாஹலிடம் மோதுவது தான். இதுவரை ஐபிஎல் தொடரில் ஆர்சிபிக்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள ருத்ராஜ் கெயிக்வாட் 3 முறை யுவேந்திர சாஹலிடமே விக்கெட்டை பறிகொடுத்துள்ளார். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த ருத்ராஜ், வேண்டுமென்றே சாஹலின் பந்தை அடிக்க முற்பட்டு தவறான ஷாட் செலக்ஷனால் அவுட்டானார்.
சிஎஸ்கேவுக்கு முதல் வெற்றி
சார்ஜா மைதானம் சிஎஸ்கேவுக்கு பிடிக்காத ஒரு பிட்சாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சார்ஜா மைதானத்தில் இதற்கு முன்னர் சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளிலுமே தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. முதல் முறையாக நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று அதனை மாற்றி அமைத்துள்ளது.