சொதப்பிய பஞ்சாப்
முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல் 21 (22), மந்தீப் சிங் 15 (14) அடுத்தடுத்து வெளியேறினர். இதன் பின்னர் வந்த கிறிஸ் கெய்லும் 1 (4), நிகோலஸ் பூரன் 2 (3) ஆகியோரும் அதிர்ச்சி கொடுத்தனர். கடைசியில் மார்க்கரம் 42 (29), தீபக் ஹூடா 28 (26) அடிக்க அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை அணி சார்பில் பும்ரா மற்றும் போலார்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை வெற்றி
இதன் பின்னர் களமிறங்கிய மும்பை அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரோகித் 8 (10), டிகாக் 27 (29), சூர்யகுமார் யாதவ் (0) ஆகியோர் ஏமாற்றினர். மிடில் ஆர்டரில் சௌரப் திவாரி நிலையாக நின்று 45 ரன்கள் அடித்துக் கொடுத்தார். கடைசி சில ஓவர்களில் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் ஆகியோர் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என அதிரடி காட்ட மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு முதல் வெற்றியை பெற்றும் மும்பை மீண்டும் ப்ளே ஆஃப் ரேஸில் நுழைந்துள்ளது.
ஆட்ட நாயகன்
இந்த போட்டியில் மும்பை அணியின் வெற்றியை விட, அந்த அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியிருப்பது தான் முக்கிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. நேற்றைய போட்டியில் 30 பந்துகளை சந்தித்த அவர் 2 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். இது அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த 2 வருடங்களாகவே மோசமான ஃபார்மில் இருந்து வந்தார். நேற்றைய போட்டியிலும் முதலில் பந்தை அடிப்பதற்கே மிக மோசமாக திணறி வந்தார்.
மாற்றம் ஏற்படுத்திய ஷமி
ஆனால் முகமது ஷமி வீசிய ஓவர்கள் தான் அவருக்கு திருப்புமுனையாக இருந்தது. ஷமி வீசிய 17வது ஓவரில் 2வது பந்திலேயே தூக்கி அடித்து பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். அதே போல அடுத்த பந்திலேயே சிக்ஸருக்கு விளாசி பாண்ட்யா கெத்து காட்டினார். இதன் பிறகு 18வது ஓவரில் நிதானம் காத்த பாண்ட்யா, மீண்டும் 19வது ஓவரில் ஷமியை வெளுத்து வாங்கினார். அந்த ஓவரின் 2வது பந்தில் போடப்பட்ட பவுன்சர், ஹர்திக்கின் மார்பிலேயே பட்டு காயம் ஏற்படுத்தியது. ஆனால் அதற்கடுத்த பந்துகளிலேயே 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என ஒட்டுமொத்த போட்டியையே முடித்துவிட்டார்.
ஹர்திக் நன்றி
இதுகுறித்து ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமிக்கு நான் ஸ்பெஷலாக நன்றி கூற வேண்டும். என்னை தாக்கிய அந்த பந்துதான், என்னை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டது போன்று இருந்தது. அதன்பிறகு எனக்குள் மாற்றம் ஏற்பட்டது. கடந்த சில ஆட்டங்களாக மிக மோசமாக திணறி வந்தேன். ஒவ்வொரு வாய்ப்பையும் புதிய வாய்ப்பாக நினைத்து ஆடினேன். யார் வேண்டுமானாலும் அணியை வெற்றி பெறவைத்து ஹீரோ ஆகலாம். கடந்த காலங்களில் என்ன ஆனது என்பதை மறந்துவிட்டேன். இனி எனது 100% ஆட்டத்தையும் கொடுப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா வரும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.