ஐதராபாத் இன்னிங்ஸ்
ஐதராபாத் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்துவிட்டது. ஓப்பனிங் வீரர் ஜேசன் ராய் 44 ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் தனது பங்கிற்கு 31 ரன்களும் விளாசினார்கள். பின்னர் வந்த வீரர்கள் யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 141 ரன்களே எடுக்க முடிந்தது. ஆர்சிபி அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய ஹல்ஷல் படேல் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
சுலபமான இலக்கு
பேட்டிங்கிற்கு சற்று சாதகமாக இருந்த அந்த களத்தில் எளிய இலக்கை ஆர்சிபி துரத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றார் போலவே அந்த அணியின் ஓப்பனிங் வீரர் தேவ்தத் படிக்கல் 41 ரன்கள் விளாசி நம்பிக்கை கொடுத்தார். இதன் பின்னர் வந்த விராட் கோலி (5), டேனியல் கிறிஸ்டியன் (1), ஸ்ரீகர் பரத் (12) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தனர். மறுமுணையில் நிலைத்து நின்ற மேக்ஸ்வெல் 40 ரன்கள் குவித்தார். ஆனால் அவரும் கடைசி நேரத்தில் ரன் அவுட்டாகிவிட்டார்.
கடைசி ஓவர் ட்விஸ்ட்
இதனால், கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, புவனேஷ்வர் குமார் பந்துவீச டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தார். எப்படியும் 2 சிக்ஸர்கள் பறந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமாரின் அபார பந்துவீச்சு அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணியால் 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோலி விளக்கம்
இந்த அதிர்ச்சி தோல்வி குறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் விராட் கோலி, இந்த போட்டியை விரைந்து முடிக்க யோசித்தோம். ஆனால் கடைசி வரை எடுத்துச் சென்று தவறு செய்துவிட்டோம். அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த நிலையில், நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் மேக்ஸ்வெல் ரன் அவுட்டாகி திருப்புமுணை ஏற்பட்டது.
சொதப்பல்
டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தால் ஆட்டம் எப்போதுமே ஆர்சிபியின் கையில்தான் இருக்கும். ஆனால், இந்த போட்டியில் கடைசி நேரத்தில் ஆட்டம் கையைவிட்டு போனது. புவனேஷ்வர் குமாரால் கடைசி ஓவரில் கட்டுப்படுத்த மடியும் என்பதை நாங்கள் அறிவோம். எனினும் சொதப்பிவிட்டோம். மற்றபடி எங்கள் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததது. புள்ளிபட்டியலில் நாங்கள் மிகவும் மேலே செல்லவில்லை. அதேபோல் கீழேயும் செல்லவில்லை. சிறு சரிவுதான். அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம் என்றார்.