எப்படி தோற்றது ஆர்சிபி
முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்களை குவித்தது. முன்னணி வீரர்கள் அனைவருமே சொதப்பியதால் குறைந்த இலக்கு தான் வைக்கப்பட்டது. இதன் பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி ஜாஸ் பட்லரின் அதிரடி சதத்தால் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் மீண்டும் ஏமாந்தனர்.
டூப்ளசிஸ் மனவருத்தம்
இந்நிலையில் இதுகுறித்து கேப்டன் டூப்ளசிஸ் மனம் கலங்கியுள்ளார். அதில், நாங்கள் களத்திற்குள் நுழைந்த போதே, இந்த இலக்கை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணர்ந்தோம். முதல் மூன்று ஓவர்கள் அதை உறுதி செய்துவிட்டது. 180 ரன்கள் அடித்திருந்தால் வென்றிருக்கலாம் என தற்போது தோன்றுகிறது. மற்ற களங்களை விட இந்த பிட்ச் வித்தியாசமாக இருந்தது. எங்களுக்கு முதல் 6 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் போன்று இருந்தது.ஆனால் 2வது இன்னிங்ஸில் அப்படியே மாறிவிட்டது.
சிறந்த ஆண்டு
முக்கிய போட்டியில் தோற்றது வருத்தமாக இருந்தாலும், ஒரு கேப்டனாக எனது முதல் சீசனே இவ்வளவு சிறப்பாக அமைந்துள்ளது. ஆர்சிபிக்கு ஆதரவுக் கொடுத்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள். பபுள்களை தாண்டி எங்களுக்கு பெரும் ஆதரவு தந்துள்ளீர்கள். ஹோட்டலுக்கு சென்றால் அதிகாலை 3 மணி வரை எங்களுக்காக சிலர் உழைக்கின்றனர். மீண்டும் காலை 7 மணிக்கு எழுகின்றனர். அது நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
3 வருட பணிகள்
அடுத்த மூன்று ஆண்டுக்கான ஆர்சிபி படை சிறப்பாக உள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள வீரர்கள், 3 வருடங்களில் சூப்பர் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் முடிந்த பிறகு 3 இந்திய அணியை உருவாக்கும் அளவிற்கு வீரர்கள் இருக்கிறார்கள். மறக்க முடியாத தருணங்கள் இருந்தது. ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என டூப்ளசிஸ் கூறியுள்ளார்.