சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று சென்னையில் தொடங்கியது.
ஐபிஎல் 2018-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெறும்.
சூதாட்ட புகாரில் சிக்கியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளாக விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த தடை இந்த ஆண்டு விலகியது.
இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதற்காக நேற்றிரவு முதல் ரசிகர்கள் மைதானத்தின் வாசலில் காத்து கிடந்தனர்.
இங்கு 3 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டு ஒருவருக்கு இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ. 1300 முதல் ரூ.6500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
டிக்கெட் விலை கூடியிருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடப்பதால் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். ஏப்ரல் 10-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விழா எடுக்கப்படுகிறது.
அதன்பின்னர் போட்டிகள் நடைபெறுகின்றன. மஞ்சள் ஜெர்சியை தல டோணி போடுவதை எண்ணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.