இந்தியா-ஆஸி. ஒருநாள் தொடர்தான் கடைசி.. இனி இப்படி ஒரு தொடர் நடக்காது?
மும்பை: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையே தற்போது நடைபெறும் தொடர்தான், ஐந்து போட்டிகள் கொண்ட கடைசி ஒருநாள் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில் 21ம் தேதி 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடைபெற உள்ளது.

கிரிக்கெட் லீக்
இதில் கவனிக்க வேண்டியது, கிரிக்கெட்டில் ஐ.சி.சி கொண்டுவர உள்ள மாற்றங்களைத்தான். இந்த மாற்றங்களில் முக்கியமான ஒன்று, சர்வதேச கிரிக்கெட் ஆட தகுதி பெற்ற 13 அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் லீக் நடத்துவதாகும். இந்த லீக்கை நடத்துவதற்கு ஐ.சி.சி. தீவிரம் காட்டி வருகிறது.

5 போட்டிகள் தொடர் இருக்காது
இந்த லீக் நடைபெற்றால் வருங்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது கடினம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தலைவர் சுதர்லேண்டும் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

டி20 போட்டிகளுக்கு வாய்ப்பு
சுதர்லேண்ட் கூறுகையில், எத்தனை போட்டிகள் வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் வருங்காலத்தில் எந்த நாடுமே மூன்று போட்டிகளுக்கு மேல் கொண்ட ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் டி20 போட்டிகள் என்றால் கூடுதலாக நடத்தப்படலாம்.

ஒருநாள் தொடரில் மாற்றம்
ஒருநாள் கிரிக்கெட் லீக் நடைமுறைக்கு வந்தால், 13 அணிகளும் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை சொந்த மண்ணிலும், தலா ஒருமுறை வெளிநாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும் என்ற நடைமுறை வரும். இதனால் ஒருநாள் தொடர் மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. இவ்வாறு சுதர்லேண்ட் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications