மும்பை: சமீபத்தில் இந்தியா வந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆர்தர்டன் அவரது பயணம் முடிந்து செல்கையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் 'இங்க்லீஷ் பிரீமியர் லீக்' போன்று கடுமையாக நடந்துக்கொள்கிறது,
ஒரு போட்டியில் தோற்றால் கூட நிர்வாகத்தினர் வீரர்கள் மீது கண்டிப்பாக நடந்துக்கொள்கிறார்கள் என்று ஒரு ட்வீட் செய்திருந்தார். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனாலும் மும்பை அணியை வழிநடத்தும் ரோஹித் ஷர்மாவின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது உண்மையாக இருக்கக்கூடுமோ என்றுத் தோன்றத்தான் செய்கிறது.
இந்திய அணிக்காக கடந்த ஐந்தாண்டுகளாக துவக்க வீரராக களமிறங்கும் ரோஹித் ஷர்மா இதுவரை மூன்று முறை டபுள் செஞ்சரி அடித்து சாதனைப் படைத்துள்ளார். சமீபத்தில், இலங்கை அணிக்கு எதிராக இருபது ஓவர் போட்டியிலும் ஒரு செஞ்சுரி அடித்தது நினைவிருக்கலாம்.
இப்படி உலகெங்கிலும் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களையும் தைரியமாக எதிர்கொள்ளும் 'ஹிட்மேன்' ஐபிஎல் தொடரில் கொஞ்சம் அடக்கி வாசிப்பது அதிர்ச்சிதான்.
மிடில் ஆர்டரில் ஆடி வந்த ரோஹித் துவக்க வீரராக தன்னை மாற்றிக்கொண்டாலும், இன்னமும் சில விஷயங்கள் அவருக்கு பிடிபடவில்லை. உதாரணமாக, இடது கை வேகப்பந்துவீச்சாளர்கள் வீசும் 'இன் ஸ்விங்' எனப்படும் வெளியிலிருந்து நூற்றிநாற்பது கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை எதிர்க்கொள்ள முடியாமல் தவிப்பது, அவ்வப்போது முதல் பதினைந்து பந்துகளுக்குள் வெளியே செல்லும் பந்துகளை துரத்தி கீப்பர்/ஸ்லிப் ஏரியாவில் கேட்ச் கொடுத்து வெளியேறுவது என சில குறைபாடுகள் இருந்தாலும், ரோஹித் ஷர்மாவின் விக்கட்டை அவரே தூக்கி எறிந்தால் தான் உண்டு, ஏனைய நேரங்களில்.
ஐபிஎல் போன்ற உள்நாட்டில் நடைபெறும் போட்டிகளில் ரோஹித் பதினான்கு ஆட்டங்கள் துவக்க வீரராக களமிறங்கி, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளைத் திருத்திக்கொள்ள நல்ல வாய்ப்பு. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தென் ஆப்பரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து என பலதரப்பட்ட பந்துவீச்சாளர்களை துவக்க வீரராக வந்தால் எதிர்கொள்ள ஏதுவாக இருக்கும்.
ரோஹித் ஷர்மா துவக்க வீரராக அடித்து ஆட முற்பட்டு சில போட்டிகளில் சீக்கிரம் வெளியேற, சூர்ய குமார் யாதவை களமிறக்கிவிட்டு இப்போது பின் வரிசையில் ஆடி வருகிறார். இது நிச்சயம் அவருக்கும் இந்திய அணிக்கும் பெரிதாக வலு சேர்க்கப்போவதில்லை. ரோஹித்தின் அதிரடி திறமைக்கு, அவர் துவக்க வீரராக வந்து நிறைய பந்துகளை வீணடித்தாலும், நிலைத்து நின்றுவிட்டால் அப்புறம் யார் போட்டாலும் சிக்ஸர்கள் தான். இது அவருக்கும் நிச்சயம் தெரியும்.
ஒரு க்ளப் போட்டிக்காக தன்னுடைய திறமையை சந்தேகித்து அடிப்படையை மாற்றிக்கொள்வது எந்த விதத்தில் நியாயம்? மும்பைக்கு விளையாடுகையில் ரிஸ்க் எடுக்காமல் அணியின் வெற்றிக்கு பாடுபடும் ரோஹித், சர்வதேச அளவில் தான் அவுட் ஆனாலும் பரவாயில்லை என துவக்க வீரராக களமிறங்குவது ஏன்? கே.எல் . ராகுல் போன்றவர்கள் தங்களை நிரூபிக்கும் வேளையில். ரோஹித் நிச்சயம் இதை மும்பைக்காக தியாகம் செய்ய வேண்டுமா?