கோலி அரைசதம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்தியா, 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரோஹித் ஷர்மா 11 ரன்களிலும், லோகேஷ் ராகுல் 17 ரன்களிலும் அவுட்டானார்கள். பிறகு, புஜாரா 31 பந்துகளை சந்தித்து 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆண்டர்சன் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 5வது வீரராக களமிறக்கப்பட்ட ஜடேஜா, 10 ரன்களில் வெளியேறினார். இதன் பிறகு கேப்டன் விராட் கோலி அரைசதம் அடித்தாலும், 50 ரன்னில் ஓலே ராபின்சன் ஓவரில் எட்ஜ் ஆகி அவுட்டானார்.
63 ரன்கள் பார்ட்னர்ஷிப்
பிறகு துணை கேப்டன் 14 ரன்களிலும், ரிஷப் பண்ட் 9 ரன்களிலும் வெளியேற, இந்தியா 127 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடிய ஷர்துல் தாகூர், 36 பந்துகளில் 57 ரன்களை விளாசினார். இதில், 3 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். 8வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூர் - உமேஷ் யாதவ் பார்ட்னாட்ஷிப் 63 ரன்கள் சேர்த்தது. பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 290 ரன்கள் சேர்த்தது. அதாவது இந்தியாவை விட 99 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது.
முதல் வெளிநாட்டு சதம்
இங்கிலாந்து சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டிருந்தாலும், இந்திய தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பாகவே விளையாடினார்கள். இந்நிலையில், மூன்றாவது நாளான இன்றும், இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்சைட் எட்ஜ் ஆகி 46 ரன்களில் வெளியேறினார். பிறகு களமிறங்கிய புஜாரா, ரோஹித் ஷர்மாவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார். பிறகு, மொயீன் அலி ஓவரில் இறங்கி வந்து மெகா சிக்ஸர் விளாசிய ரோஹித், இந்திய மண்ணுக்கு வெளியே.. அதாவது வெளிநாட்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 205 பந்தில் தனது சதத்தை நிறைவு செய்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித்தின் எட்டாவது சதமாகும். ஒரு தொடக்க வீரராக நான்காவது டெஸ்ட் சதமாகும். இந்த இன்னிங்ஸின் மூலம், அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் 11,000 ரன்களை கடந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்களை நிறைவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் ஒரு தொடக்க வீரராக சதம் அடித்த முதல் பேட்ஸ்மேன் எனும் பெருமையையும் அவர் பெற்றார்.
எட்டி உதைத்த ஆண்டர்சன்
இந்நிலையில், ரோஹித் ஷர்மாவின் அபார ஆட்டம் காரணமாக கடுப்பான இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விரக்தியில் பிட்சை சேதப்படுத்தும் விதமாக எட்டி உதைக்கு வீடியோ வெளியாகியுள்ளது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முதல் செஷனில், 38வது ஓவரை ஆண்டர்சன் வீசினர். பந்துகளை எதிர்கொண்டவர் ரோஹித் ஷர்மா. அந்த ஓவரில் கடைசி பந்தில், ஆண்டர்சன் ஸ்விங் வீச முயற்சித்தார். ஆனால், பந்தில் எந்த ரியாக்ஷனும் இல்லை. தேமே என்று சென்றது. ஜஸ்ட் கால்களை முன்னே நகர்த்தி, கவர்ஸில் ஒரு அற்புதமான பவுண்டரி அடித்தார். இதனால், விரக்தியின் உச்சிக்கே சென்ற ஆண்டர்சன், பந்தை பிட்சில் தனது காலால் ஓங்கி உதைத்தார். இதனால், கிரீஸ் அருகே பிட்ச் சற்று சேதமானது. இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.