டாக்கா: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பரிசளிப்பு விழாவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவரான வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்தபா கமால் பங்கேற்காமல் திடீரென வெளியேறினார். ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையே மெல்போர்னில் நடந்த இறுதிப்போட்டியை பார்த்துக் கொண்டே இருந்த முஸ்தபா, விழாவை புறக்கணித்து கோபமாக புறப்பட்டுச் சென்றார்.
இதனால் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு ஐ.சி.சி. சேர்மன் என்.சீனிவாசன் உலக கோப்பையை வழங்கினார். பெரும் பஞ்சாயத்தைக் கிளப்பிய இந்த பிரச்சினைக்கு இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு எதிராக, வங்கதேசத்தின் ருபெல் ஹூசைன் வீசிய பந்தை பாகிஸ்தான் நடுவர் அலிம் தார் 'நோ-பால்' என்று தவறாக தீர்ப்பளித்ததுதான் காரணம்.
பாகிஸ்தான் நடுவரின் தவறான தீர்ப்பை ஐ.சி.சி. தலைவர் முஸ்தபா கமால் வெளிப்படையாக விமர்சித்திருந்தார். மேலும் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்று கொந்தளித்திருந்தார்.
அதன் பின்னரும் கோபம் அடங்காத கமால், உலக போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ஐ.சி.சி. தலைவர் தான் கோப்பையை வழங்க வேண்டும் என்பது அடிப்படை விதியாகும். எனவே நான் தான் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையை வழங்கி இருக்க வேண்டும். ஆனால் எதிர்பாராதவிதமாக கோப்பையை வழங்க எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நான் நாடு திரும்பியதும் ஐ.சி.சி.யில் என்ன நடக்கிறது என்பதை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துவேன். இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்துவேன் என்றெல்லாம் குமுறிக் கொட்டியிருந்தார்.
இந்நிலையில் திடீரென ஐ.சி.சி. தலைவர் பதவியில் இருந்து முஸ்தபா கமால் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.