கெவின் பீட்டர்சன் பேட்டி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் உலகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபல கிரிக்கெட் வீரர்களை பேட்டி எடுத்து வருகிறார்.
முந்தைய பேட்டிகள்
முன்னதாக ரோஹித் சர்மாவை பேட்டி எடுத்த கெவின் பீட்டர்சன், அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அஹ்மத் ஷாசாத்தை பேட்டி எடுத்தார். அதைத் தொடர்ந்து உலகின் முன்னணி பேட்ஸ்மேனும், இந்திய அணியின் கேப்டனும் ஆன விராட் கோலியை பேட்டி எடுத்தார்.
தனிப்பட்ட பேச்சு
அந்த பேட்டியின் போது தோனி தன்னிடம் ஒரு முறை தனிப்பட்ட முறையில் கோலியின் கேப்டன்சி குறித்து பேசிய விஷயங்களை கூறி, கேள்வி எழுப்பினார். அதற்கு கோலியும் உடனடியாக அதிரடி பதில் அளித்து பொங்கி எழுந்தார்.
தோனி அருகே வந்தார்
பீட்டர்சன் கெவின், கோலியிடம் கூறுகையில், "நான் ட்ரெட்மில்லில் ஓடிக் கொண்டு இருந்தேன். எங்கே என்று நினைவில்லை. அப்போது அருகே தோனி வந்தார். எனக்கு அருகே இருந்த ட்ரெட்மில்லில் அவர் ஏறிக் கொண்டார். நாங்கள் இருவரும் உங்களையும், உங்கள் கேப்டன்சி பற்றியும் பேசிக் கொண்டோம்" என்றார்.
போட்டுக் கொடுத்த பீட்டர்சன்
"அவர் ஒரு விஷயத்தை பற்றி ஆர்வமாக இருப்பதாக கூறினார். களத்தில் இதே அளவு சக்தி, ஆர்வம், போராட்டத்தை வெளிப்படுத்தும் தலைமை ஆகியவற்றை உங்களால் தொடர்ந்து நீட்டித்து வைத்திருக்க முடியுமா? என கூறினார்" என தோனி எழுப்பிய சந்தேகத்தை கோலியிடம் தெரிவித்தார் பீட்டர்சன்.
கோலி பதிலடி
அதற்கு கோலி உடனே பதில் அளித்தார். "நீங்கள் இதை தோனியிடம் கூட கேட்டுக் கொள்ளலாம். நான் தோனியின் கீழ் ஆடும் போது எப்போதும் அவர் காதுகளில் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பேன். நாம் இதை செய்யலாம், அதை செய்யலாம் என சொல்லிக் கொண்டே இருப்பேன்" என்றார் கோலி.
120 சதவீதத்தை அளிப்பேன்
"லாங் ஆன் திசையில் இருந்து லாங் ஆஃப் திசைக்கு ஓடுவேன். நான் சரியான இடத்தில் இருப்பது அவசியம். நான் இந்த விளையாட்டை ரசிப்பது அவசியம். இப்போது கேப்டனாக இருக்கும் போதும் கூட. ஒவ்வொரு பந்துக்கும் என் 120 சதவீதத்தை அளிப்பேன்." என விளக்கம் அளித்தார் கோலி.
கோலி கொண்டாட்டம்
மேலும், "எனக்கு வேறு எப்படியும் ஆடத் தெரியாது. நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். நான் இதே போல ஆடவில்லை என எண்ணும் நாள் அன்று நான் விலகி விடுவேன். என் பந்துவீச்சாளர்கள் அவர்கள் விக்கெட் எடுக்கும் போது அவர்களை விட நான் அதிகம் கொண்டாடுவதாக கூறுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது" என்றார் கோலி.
பீட்டர்சன் செய்த வேலை
தோனி, பீட்டர்சனிடம் பேசிய போது, இப்படி பீட்டர்சன், கோலியிடமே இந்த விஷயத்தை கூறுவார் என எதிர்பார்த்து இருக்க மாட்டார். ஆனால், தோனி, கோலியின் தலைமை மீது சந்தேகப்பட்டதை கோலியிடம் ரசிகர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட பேட்டியில் உடைத்து இருக்கிறார் பீட்டர்சன்.
கருத்து வேறுபாடுகள் இருக்குமோ?
கோலி மீதான தோனியின் சந்தேகம், கோலி அதற்கு அளித்த அதிரடி பதிலடி ஆகியவற்றை பார்க்கும் போது, தோனி, கோலி இடையே லேசான கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. தோனி இனி இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.