தில்லானா மோகனாம்பாள் மனோரமா...!
தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிவாஜியைப் பார்த்து மனோரமா கேட்பார்.. நானும்தான் வாசிக்கிறேன். ஆனா நீங்க வாசிச்சா மட்டும் இப்படி மயக்குதே.. அது எப்படி.. என்று.. அதேபோலத்தான் மேக்ஸ்வெல் அடித்தால் பந்துகள் போருக்கும், சிக்ஸுக்கும் மட்டுமே பறக்கின்றன. அப்படி என்ன மாயத்தை தனது பேட்டில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.
ஓவர் ரன் குவிப்பு
நடப்புத் தொடரில் இதுவரை 435 ரன்களைக் குவித்து விட்டார் மேக்ஸ்வெல். இன்னும் பல போட்டிகள் உள்ளன. இவர் அடிக்கிற வேகத்தைப் பார்த்தால் ஆயிரம் ரன்களுக்குப் போய் விடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
அப்படியே கொத்துக் கறி போடுவது போல
7 ரன்கள் எடுக்கும் வரை அப்படியே ஒன்னுமே தெரியாத பாப்பா போல சிரித்தபடி ஆடிக் கொண்டிருந்தார் மேக்ஸ்வெல். அதற்குப் பிறகு அவர் ஆடிய ஆட்டம் இருக்கிறதே.. அய்யகோ.. சொல்ல வார்த்தை ஒன்றும் தோன்றவி்ல்லையே.. அப்படியே கறிக்கடையில் கொத்துக் கறி போடுவது போல பிரித்து மேய்ந்து விட்டார் சென்னை பவுலர்களை.
செத்தாண்டா சேகரு..
சென்னையின் ஒவ்வொரு பந்தையும் பவுண்டிரிகளுக்கும் சிக்ஸருக்கும் அவர் விரட்டியடித்த விதம்.. சிலாகிக்க வைத்து விட்டது போங்கள்... அவர் அடித்த வேகத்தைப் பார்த்து பொங்கலாகிப் போனார்கள் சென்னை பவுலர்கள்.
முடியலை..
பஞ்சாப் அணி 200 ரன்களைத் தொட்டபோது போதும்டா சாமி ஓவரை குறைச்சிட்டு ஆளை விடுங்கடா அப்பா என்று சென்னை ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். காரணம் அதற்குப் பிறகும் நிறைய பந்துகள் இருந்ததால்.
நிவாரணம் கொடுத்த மொஹித் சர்மா
கடைசியில் மொஹித் சர்மா பந்தில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேக்ஸ்வெல். சென்னை ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடாத குறை.. ஆனால் அதற்குள் போதிய அளவிலான பாதிப்பை சென்னைக்கு நிறையவே ஏற்படுத்தி விட்டது பஞ்சாப்.
என்ன கொடுமைன்னா பாஸ்..
நேற்றைய போட்டியில் என்ன காமெடி என்றால் சென்னை வீரர்களின் பவுலிங்தான் இப்படி இருந்ததால் பீல்டிங் அதை விட மோசம். எல்லாப் பந்தையுமே நல்லா அடிங்கடா என்று இவர்களே தூக்கித் தூக்கிக் கொடுத்தது போல இருந்தது.
பேசாம அவிங்களை அணியில சேர்த்திருக்கலாம் போலயே..
அதை விட காமெடி என்னவென்றால், நமது பீல்டர்களை விட வெளியில் இருந்தவர்கள் பிடித்த கேட்ச்தான் அதிகம். அதாவது மேக்ஸ்வெல் அடித்த பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே பாய்ந்தபோது பால் பாய் ஒரு அபாரமான கேட்ச்சைப் பிடித்தார். அட, பஞ்சாப் அணியின் வீரர் ஒருவரே கூட கேட்ச் பிடித்து காமெடியாக்கி விட்டார்.
நம்பிக்கையுடன் சேஸிங்
இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் வேறு யாராவதாக இருந்தால் செத்துப் போயிருப்பார்கள். ஆனால் சென்னை வீரர்க் தான் கிங்குகளாச்சே.. நம்பிக்கையுடன் சேஸ் செய்யத் தொடங்கினர்.
ஸ்மித் அதிர்ச்சி
மேக்ஸ்வெல்லுக்கு சற்றும் குறையாத வேயன் ஸ்மித் இருப்பதால் நம்பிக்கை இருந்தது. ஆனால் முதல் ஓவரிலேயே ஸ்மித் பவுண்டரி அடித்த கையோடு வெளியேறியதால் பெரும் அதிர்ச்சியாகி விட்டது.
ரெய்னா - மெக்கல்லம் வான வேடிக்கை
இருப்பினும் பிரன்டன் மெக்கல்லமும், ரெய்னாவும் சேர்ந்து சற்று நம்பிக்கையூட்டனர். மெக்கல்லம் 33 ரன்களிலும், ரெய்னா 35 ரன்களிலும் வீ்ழ்ந்தனர்.
டூபிளஸிஸ்
அதன் பின்னர் டூபிளஸிஸ் சற்று அதிரடியாக ஆடி ரன் குவித்தார். அவருக்கு நல்ல கம்பெனி ஒருவர் இருந்திருந்தால் நிச்சயம் சென்னையால் வெற்றியைத் தொட்டுப் பார்த்திருக்கலாம். ஆனால் டூபிளஸிஸ் இறங்கிய நேரத்தில் பின்னால் விக்கெட்கள் இல்லாததால் அவரும் டோணியும் சற்று கவனமாகவே ஆட வேண்டிய நிலை.
5 ஓவர்களில் 113 ரன்கள் தேவை
கடைசி 5 ஓவர்களில் சென்னை அணி 113 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. இதை டோணியும், டூபிளஸிஸும் நம்பிக்கையுடன் துரத்தினர். விட்டால் எடுத்து விடுவார்களோ என்று கூடத் தோன்றியது. ஆனால் முடியவில்லை.
கடைசி பந்தில் சிக்ஸுப்பா...
சென்னை வீரர்கள் கடைசி வரை ஆடினர் என்பதுதான் இதில் விசேஷம். அதாவது கடைசிப் பந்தில் கூட அஸ்வின் ஒரு சிக்ஸர் அடித்து சென்னை வீரர்களின் கமிட்மென்ட்டை வெளிப்படுத்தினார்.