சிறந்த ஆட்டக்காரர்
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக விளங்கிய முகமது அசாருதீன், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி பின்பு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தன்னுடைய ஆயுட்கால தடையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸ்
காங்கிரஸ் எம்.பியாக இருந்த அசாருதீன், தன்னுடைய ஆயுட்கால தடை நீக்கத்திற்கு பிறகு கிரிக்கெட்டில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். அவர் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கபில்தேவ், அசாருதீன், சந்து போர்டு பங்கேற்பு
கொல்கத்தாவில் நடந்து முடிந்துள்ள இந்தியாவின் முதல் பகலிரவு போட்டியில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், அசாருதீன், சந்து போர்டு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
சந்து போர்டை சந்தித்தது மகிழ்ச்சி
இந்நிலையில் தனது சக ஆட்டக்காரரான கபில்தேவ் உள்ளிட்டவர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளித்ததாகவும், இந்திய அணியில் தனது பங்களிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்த சந்து போர்டை சந்தித்தது சிறப்பான தருணம் என்றும் அசாருதீன் தெரிவித்துள்ளார்.
அசாருதீன் நெகிழ்ச்சி
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானம் தனது சிறப்பான ஆட்டங்களின் சாட்சியாக இருந்து வந்துள்ளதாக அசாருதீன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக 182 ரன்கள் அடித்தது, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 109 ரன்கள் குவித்தது போன்ற பல சாதனைகளை அவர் இந்த மைதானத்தில் புரிந்துள்ளார்.
அசாருதீன் பாராட்டு
கேப்டனாக இருந்து இந்தியாவில் பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வெற்றியை குவித்த அசாருதீன், இந்தியாவிற்கு வெளியில் நடைபெற்ற எந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் தற்போது இந்திய அணி தனது வேகப்பந்து வீச்சின்மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெற்றிகளை குவித்து வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் சிறப்பாக உள்ளது
இந்தியாவின் வேகப்பந்து வீச்சு இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் வலிமையாகவும், சிறப்பாகவும் உள்ளதாக அசாருதீன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.