ஷமி கம்பேக்
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது சீனியர் வீரர் முகமது ஷமி தான். 6 ஓவர்களை வீசி 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதற்காக 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். இந்நிலையில் முகமது ஷமிக்கும், அவரின் தீவிர ரசிகனான உம்ரான் மாலிக்கிற்கும் இடையே நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக கலக்கி வரும் உம்ரானுக்காக ஷமி பல முக்கிய அறிவுரைகளை கூறியுள்ளார்.
முகமது ஷமியின் அட்வைஸ்
அதில், உம்ரான் உங்களிடம் விடா முயற்சி என்பது நிறைய உள்ளது. ஆனால் உங்களிடம் அதிகப்படியான வேகம் இருப்பது தான் சவாலாக இருக்கிறது. ஏனென்றால் அதிக வேகத்துடன் சரியான லைன் மற்றும் லெந்தில்வீச முடிவதில்லை. உனது பந்துவீச்சை இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். அது மட்டும் நடந்து, அதிவேகமான பந்தை துள்ளியமாக லைனில் வீசிவிட்டால் உலகின் தலைசிறந்த பவுலராக வரலாம் என ஷமி கூறியுள்ளார்.
கூலாக எப்படி இருப்பது?
கடினமான சூழல்களை எப்படி பந்துவீசுவது என உம்ரான் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் கொடுத்த ஷமி, இந்தியாவுக்காக விளையாடினால் முதல் தகுதியே அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளவே கூடாது. பதற்றமடைந்தால் நமது திட்டத்தை செயல்படுத்தவே முடியாது. நமது திறமையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், எவ்வித அழுத்தமும் இல்லாமல் இருந்தால் திட்டத்தை சுலபமாக செயல்படுத்தலாம்.
உம்ரான் மாலிக் ரெக்கார்ட்
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும் நமது பந்துவீச்சை அடிக்கலாம். ஆனால் பிட்ச்-ன் தன்மையை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல பந்துவீசுபவர்களுக்கு தான் இங்கு வெற்றி என ஷமி கூறியுள்ளார். 23 வயதாகும் உம்ரான் மாலிக் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவருக்கு நியூசிலாந்து தொடரில் இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.