காயம் இன்னும் குணமாகவில்லை.. ஐபிஎல் தொடரில் மலிங்கா இல்லை!
கொழும்பு: முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, 4 மாத காலம் ஓய்வெடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் அவர் ஆட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது, மலிங்காவுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதன்பிறகு மலிங்கா இன்னமும் தேறவில்லை.

உலக கோப்பை டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த மலிங்கா, ஒரு போட்டியில் ஆடினார். இதன்பிறகு அவரால் பங்கேற்க முடியவில்லை. மலிங்கா பங்கேற்ற போட்டியில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் தோற்று, அரையிறுதிக்குள் நுழைய முடியாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.
உடல் நிலை பற்றி மலிங்கா பொய் சொல்வதாகவும், ஐபிஎல் தொடரில் அவர் ஆடும்போது உண்மை தெரியவரும் என்று இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு தலைவர் அரவிந்த் டி சில்வா காட்டமாக கூறியிருந்தார். இந்நிலையில், ஐபிஎல் தொடரில் மலிங்கா ஆடப்போவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்யப்போகும் இலங்கை அணியிலும் மலிங்கா இடம்பெறப்போவதில்லை. கால் காயத்துக்கு ஆபரேஷன் செய்ய வேண்டுமா என்பதை மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு அணி நிர்வாகம் முடிவு செய்யும். மலிங்கா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடிவருபவர் என்பது நினைவு கூறத்தக்கது.


Click it and Unblock the Notifications