ஹைதராபாத்: பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டுகள் தங்களுக்கு ஊக்கம் அளித்ததாக பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார்.
பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்தினார். மகளிர் பேட்மின்டனில் இந்திய வீராங்கனை வென்ற முதல் வெள்ளி இதுதான் என்பது சிறப்பு. சிந்து வெற்றிக்கு பின்னால் இருப்பது அவரின் பயிற்சியாளர் கோபிசந்த் என அனைவரும் கொண்டாடுகிறார்கள்.
சொந்த ஊரான ஹைதராபாத் திரும்பிய சிந்துவிற்கு மட்டுமின்றி கோபிசந்திற்கும் ரசிகர்கள் இன்று உற்சாக வரவேற்பு அளித்து அலங்கரிக்கப்பட்ட திறந்த பஸ்சில் வெற்றி ஊர்வலம் நடத்தினர். இதையடுத்து கச்சிபவுலி மைதானத்தில் பிரமாண்ட பாராட்டு விழாவும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய கோபிசந்த் கூறியது: சிந்து இந்த அளவுக்கு வருவார் என்பது எனக்கு தெரியும். அவர் இன்னும் உலக அளவில் பெரும் புகைழ பெறுவார். இந்திய அரசு உரிய உதவிகளை செய்து ஊக்கம் அளித்தது. மோடி வெளியிட்ட டிவிட்டுகள் எங்களுக்கு ஊக்கம் தந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிந்து அளித்த பேட்டியில், எனது வெற்றிக்கு பயிற்சியாளர் கோபிசந்தே காரணம். இவரது சிறப்பான பயிற்சி என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்தது. மேலும் எனக்கு ஊக்கமளித்த ரசிகர்களுக்கும் மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் பெற வேண்டும் என்ற கனவு பலித்திருக்கிறது. பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் இந்த பதக்கம் மூலம் நான் பெருமை கொள்கிறேன் . இவ்வாறு அவர் கூறினார்.