லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரன் அவுட்டானதன் மூலம், 7வது முறையாக ரன் அவுட்டாகியுள்ளார் சத்தேஸ்வர் புஜாரா. இதன் மூலம் அதிக முறை ரன் அவுட்டான இந்தியர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார் புஜாரா.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு என்ற மோசமான நிலையில் இருந்தது. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான சத்தேஸ்வர் புஜாரா மூன்றாவது வீரராகக் களமிறங்கினார். மிகவும் பொறுமையாக, டெஸ்ட் போட்டிக்கு உரிய முறையில் நிதானமாக விளையாடி வந்தார் புஜாரா.
ஆட்டத்தின் 9வது ஓவரில் பந்தை கவர்ஸ் பகுதிக்கு அனுப்பினார் புஜாரா. எதிர்புறத்தில் இருந்த கோஹ்லி ஓடி வர, புஜாராவும் ஓடினார். ஆனால் பந்தை இங்கிலாந்தின் அறிமுக வீரர் போப் தடுத்ததைப் பார்த்து, கோஹ்லி திரும்பினார். ஆனால், வேகமாக வந்த புஜாராவுக்கு திரும்புவதற்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இதனிடையில் போப் ஓடிவந்து, ரன் அவுட் செய்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 98 இன்னிங்ஸ்களில் 7வது முறையாக புஜாரா ரன் அவுட்டானார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட்டானவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் புஜாரா உள்ளார்.
இதற்கு முன் ராகுல் டிராவிட், 286 இன்னிங்ஸில் 13 முறை, சச்சின் டெண்டுல்கர் 329 இன்னிங்ஸில் 9 முறை ரன் அவுட்டாகியுள்ளனர்.