டெல்லி: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை கோச் பொறுப்பில் இருந்து துஷார் அரோத் விலகினார். அதையடுத்து புதிய கோச்சாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை கோச் பொறுப்பில் பரோடாவைச் சேர்ந்த முன்னாள் ரஞ்சி வீரர் துஷார் அரோத், 2017 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார்.
அணியில் உள்ள சில வீராங்கனைகளுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலானதாக தகவல்கள் வெளியாயின. இந்த நிலையில் கோச் பொறுப்பில் இருந்து துஷார் கடந்த மாதம் விலகினார். சொந்தக் காரணங்களுக்காக விலகுவதாக அவர் கூறினாலும், வீராங்கனைகளுடன் ஏற்பட்ட மோதலே அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
அதையடுத்து அணியின் தற்காலிக கோச்சாக, மும்பையைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தாண்டு நவம்பர் மாதம் வரை அவருடைய பதவிக் காலம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பரில் இந்திய அணி இலங்கைக்கு பயணம் செய்கிறது. அதைத் தொடர்ந்து அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது. நவம்பரில் ஐசிசி மகளிர் உலக டி-20 போட்டி நடக்க உள்ளது.
40 வயதாகும் பவாருக்கு பயிற்சி அளித்த அனுபவம் ஏதுமில்லை. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளருக்கான படிப்பை முடித்துள்ளார்.